Skip to main content

வேலை கிடைக்காத  மன உளைச்சல்; பரிதாப முடிவெடுத்த கெமிக்கல் என்ஜினியர் 

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Frustration of not getting a job; A sad end for a chemical engineer

                                                      கோப்புப்படம் 


நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (38). இவரது மனைவி ராதிகா (35). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ராதிகா, கூடலூரில் உள்ள பள்ளியில் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள சந்தோஷ்குமாருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில வருடங்களாக ஈரோட்டில் தங்கி இருந்து பெருந்துறை சிப்காட்டில் வேலை பார்த்து வந்தார்.

 

பின்னர் அந்த வேலையும் அவருக்கு ஒத்து வரவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், சந்தோஷ்குமார் கடந்த ஒரு வருடமாக ஈரோடு, அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்றில் கெமிக்கல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் ஈரோட்டில் சில ஆண்டுகளாகத் தங்கியிருந்த நிலையில் நாடார் மேடு, நேதாஜி வீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் நண்பராகியுள்ளார்.

 

அதன்பின், இருவரது குடும்பத்தினரும் நண்பர்களாக இருந்துள்ளனர். தினேஷுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் அவருக்குத் தேவையான உதவிகள் செய்ய தினேஷ் வீட்டுக்கு சந்தோஷ்குமார் சென்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் தனது மனைவி ராதிகாவுக்கு ஃபோன் செய்த சந்தோஷ்குமார், நம் இருவருக்கும் சரியான வேலை இல்லை. குழந்தைகளை எப்படி வளர்ப்பது எனத் தெரியவில்லை. மேலும், தான் தினமும் மது குடிப்பதால் அடிக்கடி தனக்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. இதனால் செத்துவிடலாம் போல உள்ளது என விரக்தியாக பேசியுள்ளார். அவருக்கு மனைவி ராதிகா ஆறுதல் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், இரவு 11 மணியளவில் தினேஷ் வீட்டில் உள்ள ஃபேன் மாட்டும் கொக்கியில், சந்தோஷ்குமார் கயிற்றால் தூக்குப் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், சந்தோஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்