Skip to main content

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம பெண் உதவியாளர் தரையில் அமர்ந்து போராட்டம்; நீதிமன்ற உத்தரவை மீறும் தாசில்தார்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

In front of the District Collector's office, the village assistant sat on the ground

 

நாமக்கல் அருகே, லஞ்ச வழக்கில் தொடர்பு இல்லை என்று நீதிமன்றம் விடுவித்த பிறகும், பணி ஆணை வழங்க மறுத்ததால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண் உதவியாளர் திடீரென்று தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வீரணம்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லோகாம்பாள். இவர், கடந்த 2020ம் ஆண்டு, அதே ஊரைச் சேர்ந்த குணா என்கிற குணசேகரன் என்பவரிடம் நில ஆவணம் தொடர்பாக 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 

 

கிராம நிர்வாக அலுவலர் சார்பில் லஞ்சப்பணத்தை வாங்கி வைத்திருந்ததாக அவருடைய உதவியாளர் கீதாவும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை பணியிடைநீக்கம் செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், லஞ்ச வழக்கில் கீதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அவருக்கு 12 வார காலத்திற்குள் அதே பணியை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

 

நீதிமன்ற உத்தரவை பெற்று வந்த கீதா, அதை பரமத்தி வேலூர் வட்டாட்சியர் சிவக்குமாரிடம் சமர்ப்பித்து, மீண்டும் பணி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து, அவருக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குவதற்காக கீதாவை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செப். 27ம் தேதி அழைத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு அவரிடம் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றதாகவும், அந்த ஆவணங்களுக்கு இடையே, தங்களுடைய 'மீளப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு நிராகரிக்கப்படுகிறது' என்று எழுதப்பட்ட ஆவணத்தையும் மறைத்து வைத்து கையெழுத்துப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. 

 

வட்டாட்சியர் அலுவலகத்தின் இத்தகைய மோசடியான செயலைக் கண்டித்து கீதா, புதன்கிழமை (செப். 28), அந்த அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பரமத்தி வேலூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று கீதாவிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தன்னிடம் மோசடியாக கையெழுத்து வாங்கிய ஆவணத்தை திருப்பிக் கொடுத்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாகக் கூறினார். 


இதுகுறித்து வட்டாட்சியர் சிவக்குமார் கூறுகையில், ''கீதா சம்பந்தப்பட்ட வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ளது. அதனால் அவருக்கு பணி ஆணை வழங்க முடியாது,'' என்றார். 


இந்த சம்பவத்தால் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.