இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் 216 ஜோடிகளுக்கு இன்று இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது. சென்னை, திருவான்மியூர் மருதீஸ்வரர் கோவிலில் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னையில் மட்டும் 31 இணை ஜோடிகளுக்கு திருமண விழா நடைபெற்றது. இவர்களுக்காக 72 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீர்வரிசை பொருட்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisment

அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். குறிப்பாக ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் செலவை திருக்கோவில் நிர்வாகமே ஏற்கும் என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மானிய கோரிக்கையில் அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் இன்று முதற்கட்டமாக 216 ஜோடிகளுக்கு இலவச திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் 31 ஜோடிகளுக்கு இந்த இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.