சேலத்தில், மருந்தாளுநர் பணி போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி செப். 21ம் தேதி தொடங்குகிறது.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; தமிழகத்தில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி) 889 மருந்தாளுநர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக வரும் 21ம் தேதி காலை தொடங்குகிறது.
இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில், பாடக்குறிப்புகள் வழங்கப்படுவதுடன் தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை, 94990 55941 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாள்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ள நபர்கள், இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருந்தாளுநர் பணிகளுக்கான தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.