
கோவை பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த குடிகிணறு தோட்டப் பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரின் மனைவி அபிநயா (31). இவரிடமிருந்து கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கட்டிட ஒப்பந்ததாரர் தீனதயாளன் என்பவரின் மகன் (கட்டிட பொறியாளர்) அருண்குமார் மற்றும் அவரது மனைவி தீபதர்ஷினி ஆகியோர் 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் திருடிச் சென்றதாக, கோவில்பாளையம் போலீசில் அபிநயா புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் கோவில்பாளையம் போலீசார் அருண்குமார் மற்றும் தீபதர்ஷினியைப் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். அதே சமயத்தில், அருண்குமார் மற்றும் தீப தர்ஷினி மீது கோவை நகர் மற்றும் புறநகர்ப் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு மோசடிப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக போலீஸாரின் பிடியில் சிக்காமல் அருண்குமார் மற்றும் தீபதர்ஷினி ஆகியோர் தலைமறைவாக இருந்ததாகவும் முதலில் சென்னையில் பதுங்கியிருந்த இந்த மோசடித் தம்பதியினர் தற்போது திண்டுக்கல் பகுதியில் தலைமறைவாக இருப்பதாகவும் வந்த ரகசியத் தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில் தங்கள் மீது புகார் அளித்த அபிநயா மற்றும் அவரது கணவர் ஜனார்த்தனன் ஆகியோர் குறித்து ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பும் விதமாக செய்திகளை அருண்குமார் மற்றும் தீபதர்ஷினி தம்பதியினர் பதிவு செய்துள்ளனர். மேலும், ஃபோன் மூலம் தொடர்புகொண்ட அருண்குமார் வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக, கோவை ராமநாதபுரம் போலீசில் அபிநயா புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில், ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அருண்குமார் மற்றும் தீபதர்ஷினி ஆகியோரை தேடி வருகின்றனர்.