Skip to main content

நிதி நிறுவன மோசடி; உரிமையாளர், மேலாளர் கைது

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

Fraudster arrested by running a financial institution

 

கும்பகோணத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவான உரிமையாளரையும் மேலாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உப்புக்காரத் தெருவில் ஐஸ்வர்யம் சிட் பண்ட் என்கிற பெயரில் ஒரு சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஆடம்பர விளம்பரத்தால் மக்களை எளிதில் கவர்ந்து வந்தது. திருச்சி உறையூர் புதுப்பாய்க்காரத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவர் இதன் உரிமையாளர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த இந்த நிதி நிறுவனத்தில் கும்பகோணத்தைச் சேர்ந்த நரேந்திரன் என்பவர் மேலாளராக இருந்து வந்தார். எங்கள் நிறுவனத்தில் நிரந்தர வைப்பு நிதியாக ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 4,000 வட்டியாகத் தருவோம் என வசீகர விளம்பர வலையில் சிக்கிய பலர், லட்சம் லட்சமாக முதலீடு செய்திருந்தனர்.

 

மேலும் மாதாந்திர சீட்டுகளும் கட்டியிருந்தனர். இந்த நிலையில் சீட்டுக்கான காலக்கெடு முடிந்தும், பலருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படாமல் இழுத்தடித்து வந்ததோடு திடீரென ஐஸ்வர்யம் சீட்டு நிறுவனத்தையும் பூட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். முதலீடு செய்தவர்கள் பல இடங்களில் தேடி அலைந்து நிறுவன உரிமையாளர் ராஜேஷ் கண்ணாவை திருச்சியில் சந்தித்து பணத்தைக் கேட்டுள்ளனர். கேட்டவர்கள் அனைவருக்கும் செக் கொடுத்துவிட்டு மீண்டும் எஸ்கேப் ஆகிவிட்டார். ராஜேஷ்கண்ணா கொடுத்த செக் அனைத்தும் பணமில்லாமல் பவுன்சாகியிருக்கிறது. பிறகு ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களில் 40 பேர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், 50 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான தனிப்படை, திருச்சியில் பதுங்கியிருந்த உரிமையாளர் ராஜேஷ்கண்ணாவையும் மன்னார்குடியில் இருந்த மேலாளர் நரேந்திரனையும் கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்