police

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (62). இவருக்கு சூரம்பட்டி எஸ்.கே.சி சாலையை சேர்ந்த வர்க்கீஸ் என்கிற ராஜா (64) அறிமுகம் ஆகியுள்ளார். கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மக்களுக்கு மனு எழுதி தரும் பணியை வர்க்கீஸ் செய்து வந்தார்.

இந்நிலையில் தனக்கு உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலம் சத்துணவு பணி, ஆசிரியர், அலுவலக எழுத்தர், அலுவலக உதவியாளர் போன்ற அரசு பணிகளை பல பேருக்கு வாங்கி கொடுத்து உள்ளேன். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அவர்களுக்கும் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என்று வர்க்கீஸ், கருப்பண்ணனிடம் கூறியுள்ளார். இதை நம்பிய கருப்பண்ணன் தனது மகனுக்கு கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கித் தருமாறு வர்க்கீஸ் இடம் கூறியுள்ளார். அதன்படி கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.9 லட்சம் பணத்தை வர்க்கீஸிடம் கருப்பண்ணன் கொடுத்துள்ளார்.

ஆனால் அவர் அரசு வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கருப்பண்ணன் இதுகுறித்து ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கருப்பண்ணன் போல மேலும் 6 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக வர்க்கீஸ் ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.

Advertisment

வர்க்கீசுக்கு உதவியாக அவரது அண்ணனான விருதுநகர் மாவட்டம் துலுக்கபட்டியில் டுடோரியல் கல்லூரி நடத்தும் பரத ராஜன் மற்றும் மேலும் 3 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதில் வர்க்கீஸ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் அவரது அண்ணன் பரதராஜனை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.