Skip to main content

கோடிக்கணக்கில் மோசடி: கமிஷனர் அலுவலகத்தில் குவியும் புகார்கள்!!

Published on 25/06/2021 | Edited on 25/06/2021

 

Fraud in the millions; Complaints piled up in the commissioner's office

 

மதுரை காளவாசலை தலைமையிடமாக செயல்பட்டுவருகிறது வேர்ல்ட் சேர்ஸ் ஓபிசி பிரைவேட் லிமிடெட். இந்த மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர். இதனை நம்பி தமிழ்நாடு முழுவதும் பலர் முதலீடு செய்துள்ளனர். இதில் குறிப்பிட்ட நாட்களில் இரட்டிப்பாக பணத்தை திருப்பித் தந்த நிறுவன உரிமையாளர்கள், மேலும் தங்களுக்கு கீழ் உறுப்பினர்களைச் சேர்த்து முதலீடு செய்தால் கூடுதல் தொகை தருவதாக ஆசை வார்த்தை தெரிவித்தனர். 

 

இதனை நம்பிய முதலீட்டாளர்கள் பலர் தங்களது உறவினர்கள், நண்பர்களிடம் பணம் பெற்று முதலீடு செய்தனர். பிப்ரவரி மாதம்வரை முதலீடு செய்தவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தந்த உரிமையாளர்கள், அதன்பிறகு பணம் தரவில்லை. அவர்களைத் தொடர்புகொண்டபோது  எந்த தகவலும் தெரிவிக்காமல் ஃபோனைத் துண்டித்துவிட்டனர். தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த முதலீட்டாளர்கள் மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் புகார் தெரிவித்தனர். இதில் தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரூ. 55 கோடிவரை  முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

புகார் தெரிவித்த பவித்ரா கூறியதாவது, “மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர்கள் ஆனந்தி, செய்யது பாரூக், மனோஜ் ஆகியோர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் முழுவதும் இந்த நிறுவனத்தை நடத்திவருகின்றனர். நிறுவனத்தில் எங்களைப்போல் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பணம் முதலீடு செய்துள்ளனர். ரூ. 2,500 முதல் 10 லட்சம்வரை முதலீடு செய்துள்ளனர். அவர்கள் முதலீட்டிற்கு ஏற்ப பணத்தைக் குறிப்பிட்ட காலத்திற்குள் இரட்டிப்பு செய்து தருவதாக உறுதி கூறியதை நம்பி நாங்கள் உறவினர்கள் நண்பர்களிடம் என பலரிடம் பணம் பெற்று அவர்களிடம் அளித்துள்ளோம். பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டால் எங்கள் குடும்பத்தினர்மீது கொலை மிரட்டல் விடுக்கின்றனர். போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைதுசெய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுத் தர வேண்டும்” என தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.