ஊத்தங்கரை அருகே 12 வயது சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நான்கு மணவர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவன் ராக்கி (12). அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். ஊத்தங்கரை கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (18). இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகின்றார்.
ராக்கி, பாலமுருகன் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் சுரேஷ் (15), சரண் (15), இதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் குமார் (16) ஆகிய ஐந்து பேரும் கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி கேத்துநாயக்கன்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சிறுவன் ராக்கியுடன் மற்ற நான்கு மாணவர்களும் பள்ளியின் கழிப்பறையில் வைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளனர்.
சிறுவர்கள் விளையாட்டுத் தனமாக பேசிக் கொண்டதன் மூலம் ஓரினச்சேர்க்கை விவகாரம் ஊர் முழுக்க அம்பலமானது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் கஸ்தூரி, வியாழக்கிழமை (மே 5) சிங்காரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் ராக்கியுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நான்கு சிறுவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
(குற்றவாளிகள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் செய்தியில் குறிப்பிட்டுள்ள சிறுவர்கள் பெயர்கள் அனைத்தும் கற்பனையாக குறிப்பிடப்பட்டுள்ளன).