
மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "7.5% உள் ஒதுக்கீடு மூலம் இந்தாண்டு 569 மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றியது அ.தி.மு.க. தான். தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறிதான். தமிழகத்தில் நான்கு முதலமைச்சர்கள் உள்ளனர், குடும்பம் அதிகார மையமாக தமிழகம் மாறியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அவரது மனைவி, மகன், மருமகன் இயக்கி வருகின்றனர்.
தி.மு.க. அரசின் 15 மாத ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை; துன்பமே கிடைத்துள்ளது. கமிஷன், கலெக்சன், கரப்ஷன் தான் திராவிட மாடல்; வரி உயர்வை மக்கள் தலைமையில் சுமத்தியது தான் திராவிட மாடல். சொத்து வரி உயர்வு தான் -வாக்களித்த தமிழக மக்களுக்கு கொடுத்த முதல் போனஸ். நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவைத் தடுக்க முடியாத திராவிட மாடல் அரசு. மக்களின் எண்ணங்களையும், துன்பங்களையும் புரிந்து கொள்ள இயலாத அரசு தி.மு.க. அரசு. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அம்மா மினி கிளினிக் மீண்டும் தொடங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.