Skip to main content

மழை பாதிப்பினால் இடிந்து சேதமான கோட்டை மதில் சுவர்!

Published on 25/11/2021 | Edited on 25/11/2021

 

Fortress wall damaged by rain

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது பிரம்மாண்டமான ராஜா தேசிங்கு கோட்டை. ராஜா தேசிங்கு என்ற மன்னன் இந்தக் கோட்டையில் தங்கியிருந்து இப்பகுதியை ஆட்சி செய்துவந்தார். தற்போது இந்தக் கோட்டை தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க தினசரி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதுவும் பண்டிகை, விடுமுறை காலங்களில் கோட்டையைக் காணவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருக்கும்.

 

செஞ்சி நகருக்கு அருகில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் மூலம் இந்த நகரில் வியாபாரமும் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது. இங்குள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி என இரண்டு கோட்டைகள் சுமார் 15 கிலோ மீட்டருக்கு கற்களால் ஆன மதில் சுவரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மதில் சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. இதனால் கோட்டைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுலா பயணிகள் கவலையுடன் கூறுகின்றனர். செஞ்சி கோட்டைப் பகுதியில், ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

 

இதனை தொல்பொருள் துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும்; மீண்டும் மதில் சுவர் அமைக்க வேண்டும்; மேலும், செஞ்சி கோட்டையையும் அதனைச் சுற்றியுள்ள மதில்களையும் ஆய்வுசெய்து, அதைப் பாதுகாக்கும் பணியில் மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

விடிய விடிய கனமழை; 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Heavy rain at dawn; The tragedy of a 9-year-old girl

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (08.01.2023) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்த வீடு என்ற பகுதியில் ராஜசேகர் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜசேகரின் 9 வயது மகள் மோனிஷா என்பவர் உயிரிழந்தார். மேலும் ராஜசேகரின் மகன் மோகன்தாஸ்(12) இச்சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளார். கனமழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி மோனிஷா பலியான சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.