Skip to main content

அலைக்கழிக்கும் அதிகாரிகள்; தீக்குளிப்பேன் என கலங்கும் முன்னாள் வி.ஏ.ஓ

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

Former vao in struggle to change patta

 

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் நங்கவரம் பேரூராட்சி, கீழ் நங்கவரம், தெற்கு தெருவைச் சேர்ந்தவர் என். மருதை (71). முன்னாள் கிராம நிர்வாக அலுவலரான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார். இவர், தனக்கு சொந்தமான 43 சென்ட் இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்த இடத்திற்கான பட்டா சிட்டா பத்திரம் என அனைத்து ஆவணங்களையும் வைத்துள்ளார். அனைத்து ஆவணங்களையும் வைத்திருந்த போதிலும் கடந்த 2018 ஆம் ஆண்டு கணினி மையமாக்கப்பட்டபோது 43 சென்ட் என்பதற்கு பதிலாக 12 சென்ட் என தவறாக கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதனால், கணினி பட்டாவை திருத்தம் செய்யக்கோரி கடந்த 2020ம் ஆண்டு முதல் பலமுறை கரூர் மாவட்ட ஆட்சியர், குளித்தலை கோட்டாட்சியர், குளித்தலை வட்டாட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் குறைதீர்க்கும் பிரிவு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் மனு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ஜமாபந்தி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளார். இருப்பினும் அவரது கோரிக்கை இது நாள் வரையிலும் நிறைவேற்றப்படவில்லை.

 

குளித்தலை தாலுகா அலுவலகத்திற்கு விசாரணை மனுவை அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் கூறினாலும், அங்கு சென்று அவர் விசாரித்தால் ‘உங்களுடைய மனுவே வரவில்லை அது எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை’ என்று சாக்குப் போக்கு சொல்லி அலைய விடுவதாக குற்றம் சாட்டுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மருதை. 

 

தனது மனைவி பெயரில் உள்ள 43 சென்ட் நிலத்தின் பட்டாவை தவறாக கணினியில் பதிவு செய்யப்பட்டதால், அவரது மனைவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனால் அவர் சமீபத்தில் இறந்து விட்டதாகவும் கண்கலங்க கூறுகிறார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மருதை. 

 

மேலும், தனக்கு 71 வயது ஆகிறது. தினமும் என்னால் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 30 கிலோமீட்டர் தூரம் சென்று வர இயலவில்லை. இதற்கு மேலும் என்னை அலைக்கழித்தால், நான் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதற்கும் வழியில்லை என்றால் தீக்குளிப்பேன் என்று கண்ணீர் மல்க கூறுகிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.