Skip to main content

“முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும்” - நீதிபதி எச்சரிக்கை!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

"Former Special DGP may be issued warrant" - Judge warns

 

தமிழ்நாடு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி, கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்புக்காக சென்றிருந்தார். அப்போது டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி.ஐ தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

 

இதற்கிடையே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழ்நாடு அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தனர் சிபிசிஐடி போலீசார். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. 

 

சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக 80க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி., கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி விழுப்புரம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆறுமணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், ஜூலை மாதம் 29ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாத் முன்னிலையில் இந்த வழக்கு சம்பந்தமான 400 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

 

இதனிடையே டிஜிபி தரப்பில், இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும், எஸ்.பி. கண்ணன் தரப்பில் இந்த வழக்கிற்கும், தனக்கும் சம்மந்தமில்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும் இரண்டுபேரும் தனித்தனியாக மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த விழுப்புரம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து, இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களைத் தனித்தனியாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றமும் இவர்களது மனுவை தள்ளுபடி செய்ததுடன், வழக்கு விசாரணையை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க உத்தரவிட்டிருந்தது. 

 

இந்நிலையில் நேற்று (29.10.2021) இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.பி. கண்ணன் நேரில் ஆஜரானார். ஆனால் டிஜிபி ஆஜராகவில்லை. அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, டிஜிபி வராதது குறித்து மனுதாக்கல் செய்தனர். மேலும், மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். எனவே  இதற்கு 15 நாட்கள் அவகாசம் தேவை என்று கேட்டனர். இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கோபிநாதன், சென்னை உயர் நீதிமன்றம் 3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளது. வரும் நவம்பர் 1ஆம் தேதி டிஜிபி கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என்று தெரிவித்தார். மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆடையை கழட்டுமா...” - நீதி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
A case of judge for A woman who went to court seeking justice in rajasthan

ராஜஸ்தான் மாநிலம், கரெவுளி மாவட்டத்தில் உள்ள ஹிண்டாவுன் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இந்த நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி சில மர்ம கும்பல், அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஹிண்டாவுன் நகர நீதிமன்றத்தின் நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். அப்போது, நீதிபதி காயங்களை காட்டுவதற்காக அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றும்படி கூறியதாக கூறப்படுகிறது. 

இதில் அதிர்ச்சியடைந்த பெண், இது தொடர்பாக நீதிபதி மீது போலீசில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், ‘என் வாக்குமூலத்தைப் பெற நீதிபதி என்னை அழைத்திருந்தார். அதன்படி, நான் நீதிமன்றத்திற்கு சென்று முழு அறிக்கையை கொடுத்தேன். அதன் பிறகு, நான் வெளியே வர ஆரம்பித்தேன். அப்போது, நீதிபதி என்னை மீண்டும் திரும்ப அழைத்தார். அப்போது, அவர் என் ஆடைகளை கழற்றச் சொன்னார். அதற்கு நான், ஏன் என் ஆடைகளை கழற்ற வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர், என் உடலில் உள்ள காயங்களை பார்க்க விரும்புவதாக கூறினார். உங்க முன்னாடி என்னால துணியை திறக்க முடியாது என்று கூறி, மறுப்பு தெரிவித்து அங்கிருந்து வெளியே சென்று விட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹிண்டாவுன் நகர போலீசார் சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நேற்று (03-04-24) வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணை ஆடைகளை கழற்ற சொன்ன நீதிபதி மீது வழக்கு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.