
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சம்பந்தி குப்பத்தைச் சேர்ந்தவர், ஆர்.வடிவேலு. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த வாணியம்பாடி தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் நாகூர் ஹனிபா போட்டியிட்டார். அத்தேர்தலில் 19 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் வடிவேலு.
இதனைத் தொடர்ந்து, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சரான ஜெயலலிதாவின் அமைச்சரவையில், வடிவேலுவை ஊரக தொழில்துறை அமைச்சராக நியமித்தார். அடுத்த சிலமாதங்களில் இவர் சில சர்ச்சைகளில் சிக்கியதால், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கினார். 82 வயதான வடிவேலுவிற்கு, இருதயம் தொடர்பான உடல்நல பிரச்சனை இருந்துவந்தது. கடந்த பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நவம்பர் 27 ஆம் தேதி இரவு 8 மணியளவில், வாணியம்பாடி அடுத்துள்ள சம்பந்தி குப்பத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்தார். மறைந்த வடிவேலுக்கு இரண்டு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.