Former minister Manikandan's bail plea to be heard tomorrow

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூன் 16 அன்று தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் கடந்த 20ஆம் தேதி கைது செய்தனர்.

இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தப்பட்ட மணிகண்டனை வரும் 2ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனு இன்று (24.06.2021) நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் கேட்டதையடுத்து வழக்கு விசாரணை ஜூன் 24ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இன்று இந்த வழக்கின் விசாரணையில், 'மணிகண்டனுக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது' என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், துணை நடிகையின் புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.