
அரக்கோணத்தில் இளைஞர் ஒருவர் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டல் விடுவதாக பெண்கள் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''அரக்கோணம் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் தெய்வசெயல். காவனூர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். சும்மா இருபது வயசு பெண்கள் டார்கெட் பண்ணி லவ் டார்ச்சர் கொடுத்து கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று தான் அவருடைய குறிக்கோள். ஐந்து வருடத்திற்கு ஒவ்வொரு 20 வயது பெண்களை தேடித் தேடி காதலித்து டார்ச்சர் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது. என்னை சுற்றி வழக்கு ஒன்று போய்க் கொண்டிருந்தது. அதைத் தெரிந்து கொண்டு வழக்கறிஞர் என சொல்லி என்னிடம் வந்து டார்ச்சர் செய்தார். திமுக கட்சியில் இருக்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துகொள் இல்லையென்றால் உங்கள் அப்பா அம்மாவை கொலை பண்ணி விடுவேன் என்று மிரட்டினார். எனக்கு யாருடைய சப்போர்ட்டும் கிடையாது. அப்பா அம்மா மட்டும்தான் எனக்கு சப்போர்ட். வேற யாருமே கிடையாது என தெரிந்துகொண்டு உள்ளே வந்து டெய்லியும் டார்ச்சர் செய்து கட்டாயமாக கல்யாணம் செய்தார். இந்த விஷயம் வெளியே போச்சுன்னா உன்னையும் உன் குடும்பத்தையும் துண்டுத் துண்டாக வெட்டிடுவேன். வரும் வழியிலேயே உன்னை காரை ஏற்றி கொலை செய்து விடுவேன். என்கிட்ட கார் இருக்கு என என்னென்னமோ பேசி மிரட்டினார். எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கிறது'' என்றார்.
அதேபோல் மற்றொரு பெண் குற்றச்சாட்டைத் தெரிவித்தார். ''ஆமாம் நான் தப்பு செய்தேன் தான். ரிமாண்ட் பண்ணுங்க என சிரிச்சுகிட்டே சொல்றான் சார். என் வாழ்க்கையே போயிருச்சு. உடம்ப நாஸ்தி பண்ணிட்டான். படிப்பும் போயி இங்கு நிக்கிறேன். நீங்கதான் எங்களுக்கு நீதி வாங்கி தரணும். என்னிடம் மட்டுமல்ல 15 பெண்கள் இதுபோன்ற குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள். இந்த பொண்ணுங்கள எல்லாம் அக்கா தங்கச்சியா நெனச்சு நீங்கதான் காப்பாத்தி தரணும்'' என வேதனையில் மன்றாடினார். இந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருந்தார். அதன்படி முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் அரக்கோணத்தில் இன்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து திமுக நிர்வாகியான தெய்வச்செயல் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அரக்கோணம் போலீசார் தெய்வச்செயல் மீது 4 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அதிமுகவின் தூண்டுதலின் பேரில் பெண்கள் புகார் அளித்ததாகவும் தனக்கு முன்ஜாமீன் வேண்டும் எனவும் தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தெய்வச்செயலுக்கும் அவருடைய மனைவிக்கும் முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.