Skip to main content

சம்பளத்தை பாக்கி வைக்காதீங்க... முதல்வர் எடப்பாடிக்கு கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ கடிதம்

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

"ஊரக வளர்ச்சித்துறை - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களின் ஊதிய நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும்" என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளருமான தோழர் நா.பெரியசாமி. மேலும் அவர் நம்மிடம் கூறுகையில்,

"கிராமப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தொழிலாளர்களின், குறிப்பாக உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்றிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மட்டுமே வாழ்வாதாரம் வழங்கி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செயல்பட வழியில்லாமல் மக்கள் அன்றாடப் பிரச்சினைகள் அப்படியே  தேங்கிக் கிடக்கின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் பல்வேறு தவறுகளும், முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

 

erode


இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, கடந்த 1.4.19 முதல் நாள் ஒன்றுக்கு இருநூற்றி இருபத்தி ஒன்பது ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் இந்த ஊதியம் வழங்குவதில்லை. மிகக் குறைந்த ஊதியம்  ரூபாய் 100 முதல் 180 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.

இந்த ஊதியமும் மூன்று மாதங்கள், சில பகுதிகளில் இதைவிடக் கூடுதலான காலம் கொடுக்கப்படாமல் ஊதிய நிலுவைத் தொகை தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இது சட்டவிரோத செயலாகும் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும் என நினைக்கிறேன். . மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் படி ஊதியப் பாக்கி 15 நாட்களைத் தாண்டுமானால் ரூபாய் 1000/=க்கு ரூபாய் 50 வீதம் அபராதம் சேர்த்து வழங்க வேண்டும் என்று  சட்டம் வலியுறுத்துகிறது. இதனை உள்ளாட்சித்துறை அலுவலர்கள் மதிப்பதில்லை.

குறிப்பாக ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்ட மன்ற தொகுதியில் ஊதியப் பாக்கித் தொகை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் நேரடி நடிவடிக்கைக்கு செல்லும் நிலையில், அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண உறுதி அளித்துள்ளனர். இதன் மீது தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள் நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் மீது முதல்வர் பழனிச்சாமி நேரடியாக தலையிட்டு அதிகாரிகள் அளித்த உறுதி மொழி காலத்தில் காப்பாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள கணக்கன்காடு ஊராட்சியில் கடந்த ஒரு வருடமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை வழங்கவில்லை என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தக்க விசாரணை நடத்தி, தவறுகள் திருத்தப்பட வேண்டும். தவறுகளுக்கு காரணமான அலுவலர்கள் மீது துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் இதே விபரங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதமாக அனுப்பியிருக்கிறார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.