Skip to main content

டீக்கடையில் கூட மதுபானங்கள் விற்க அனுமதி? - போராட்டத்தில் குதித்த முன்னாள் முதல்வர்!

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

gjh

 

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்கனவே  ஏராளமான மதுபானக் கடைகள் உள்ள நிலையில்,புதுச்சேரி - தமிழக எல்லை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் சாமிப்பிள்ளை தோட்டத்தில், காமராஜர் மணி மண்டபம் அருகே புதிய மதுபான கடை அமைக்க புதுச்சேரி அரசும், கலால் துறையும் அனுமதி அளித்துள்ளது. பா.ஜ.க பிரமுகருக்கு சொந்தமான இக்கட்டடம் உள்ள பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். புதிய மதுபானக் கடை திறக்க கட்டுமான பணிகள் முடிந்து கடை திறப்பதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

புதிய மதுக்கடை வரும் பகுதியில் பிரசித்தி பெற்ற கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோயில், காமராஜர் மணிமண்டபம் மற்றும் நிறைய குடியிருப்புகள் உள்ளதால் புதிதாக மதுபானக்கடை கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழு ஒன்றை அமைத்து, அந்த மதுபான கடையை திறக்க அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், கடை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சாமிப்பிள்ளை தோட்டத்தை சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காமராஜர் மணிமண்டபம் அருகே ஒன்று கூடி புதிய மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக அதன் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மதுபானக்கடை எதிர்ப்பு போராட்டக் குழு லெனின்.துரை, பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்,  சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், பா.ம.க மாநில அமைப்பாளர் கணபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் சேது.செல்வம், தமிழர் களம் மாநில அமைப்பாளர் அழகர் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் மதுபானக்கடை கொண்டுவரக் கூடாது என்று வலியுறுத்தியும், மதுபானக்கடைக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் மக்கள் முழக்கங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினர். அப்போது ஒரு கட்டத்தில் அப்பகுதி பெண்கள் மதுக்கடை திறக்க உள்ள பகுதியை நோக்கி சென்ற போது போலீசார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, " புதுச்சேரியில் 350-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. டீக்கடையில் கூட மதுபானங்கள் விற்க அனுமதி அளிக்கப் போவதாக தெரிகிறது. ஏற்கனவே புதுச்சேரியில் 6 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன. புதிதாக 6 மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க உள்ளனர். ஏற்கனவே ஓடும் மதுபானம் ஆறு இனி மது கடலாக மாறிவிடும்.  பெண்களின் போராட்டத்தின் மூலம் தான் மது கடைகளை அகற்ற முடியும் . அதற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.