ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை இல்லை என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்த வழக்கினை இன்று (12.12.2019) முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும்‘தலைவி’என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும்‘குயின்’என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.
தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Chennai_High_Court 2222222222_1.jpg)
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திரைப்படத்தையும், இணையதள தொடரையும் பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். படத்தைப் பார்த்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என வாதிட்டார்.
இயக்குனர் விஜய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தலைவி திரைப்படம், தலைவி என்ற பெயரில் வெளியான புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்தப் புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. அவர் ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் அல்ல என வாதிட்டார்.
இணையதள தொடர் தயாரிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் தயாரிக்கப்படவில்லை. மாறாக குயின் என்ற புத்தகத்தைத் தழுவியே எடுக்கப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/JAYALALITHA6.jpg)
2018- ஆம் ஆண்டிலேயே இணையதள தொடர் தயாரிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு, 25 கோடி ரூபாய் செலவில் தொடரைத் தயாரித்துள்ள நிலையில், விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார் எனச் சுட்டிக்காட்டினார். மேலும், தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக மனுதாரர் கூறுவது பொய். ஆனால், 2002-ம் ஆண்டுக்கு பின் அவர் ஜெயலலிதாவுடன் இல்லை எனவும், 2016-ல் இறந்தபின் தான் வந்துள்ளார். அதனால் இந்த வழக்கை தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை என்றும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று (11-ஆம் தேதி) தள்ளிவைத்தார். இன்று இந்த வழக்கினை, ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
Follow Us