Skip to main content

வேலை வாங்கி கொடுப்பதாக பல லட்சம் ரூபாய் சுருட்டல்... முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் கைது!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

Multi-million rupee scam of buying and paying for work; Former Chief Minister Edappadi Palanisamy's aide arrested

 


அரசு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி 13 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரின்பேரில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளரை சேலம் மாவட்டக் காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை (28.11.2021) கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்தவர் மணி என்கிற நடுப்பட்டி மணி. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக பணியாற்றிவந்தார். 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த குணசேகரன் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 28) என்பவர், கடந்த அக்டோபர் இறுதியில் சேலம் மாவட்ட காவல்துறை எஸ்பி ஸ்ரீஅபிநவ்விடம் நடுப்பட்டி மணி மீது ஒரு புகார் அளித்திருந்தார். 

 

அந்தப் புகாரில், ‘தான் பி.இ., படித்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நடுப்பட்டி மணி மற்றும் அவருடைய நண்பரும் அதிமுக பிரமுகருமான  செல்வக்குமார் ஆகிய இருவரும் தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றனர். 

 

ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி அரசாங்க வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பித் தரும்படி கேட்டபோது 4 லட்சம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மீதம் 13 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டனர்’ என்று கூறியிருந்தார். 

 

இந்தப் புகார் மீது சேலம் மாவட்டக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன் விசாரணை நடத்தினார். இதையடுத்து நடுப்பட்டி மணி, செல்வக்குமார் ஆகியோர் மீது மோசடி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்தார். 

 

காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்ததை அறிந்த அவர்கள் இருவரும் முன்ஜாமின் கோரி, சேலம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உயர் நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தனர். அங்கேயும் அவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  

 

இதையடுத்து, நடுப்பட்டி மணி, செல்வக்குமார் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். எனினும், அவர்களைப் பிடிக்க டி.எஸ்.பி. இளமுருகன் தலைமையிலான நான்கு தனிப்படை காவல்துறையினர் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர். 

 

காவல்துறையினரின் துரத்தலை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட இருவரும் திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தங்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் பதுங்கியிருந்தனர். 

 

இந்த நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை (28.11.2021) அதிகாலையில் சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு நடுப்பட்டி மணி வந்திருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர், நடுப்பட்டி மணியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரை ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். 

 

காவல்துறையில் பிடிபட்டுள்ள நடுப்பட்டி மணி, தொடக்க காலத்தில் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலைசெய்துவந்துள்ளார். அங்கு முறைகேட்டில் ஈடுபட்டதன்பேரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். எடப்பாடி பழனிசாமியின் ஆரம்பகால விசுவாசி என்பதால், தான் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அவரிடமே உதவியாளராக பணியில் சேர்ந்துகொண்டார். 

 

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் மணியின் ஆட்டம் ரொம்ப அதிகமாகவே இருந்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் வீட்டிலேயே இருப்பதால், அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு பல்வேறு அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நூறுக்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வாங்கிக் குவித்துள்ளதாகவும், அதுவே நான்கைந்து கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்கிறார்கள் இலைக்கட்சியினர். 

 

தற்போது நடுப்பட்டி மணி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் துணிச்சலாக முன்வந்து புகார் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. இதற்கிடையே, தலைமறைவாக உள்ள மணியின் கூட்டாளி செல்வக்குமாரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.