Former army man made trouble to Farmers tens in Dindigul

Advertisment

திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு (45). இவரது உறவினர் கருப்பையா (46). இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் அகஸ்தியர் புரம் - தென்மலை ரோட்டில் உள்ளது. அதே பகுதியில், காரைக்குடியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் தனபால் என்பவருக்கும் நிலம் உள்ளது. இதில் ராஜாக்கண்ணு, கருப்பையா மற்றும் தனபால் ஆகியோருக்கு இடையே அந்த நிலம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று தனபால் மற்றும் ராஜாகண்ணு, கருப்பையா ஆகியோருக்கு இடையே மீண்டும் அந்த நிலம் தொடர்பான பிரச்சனை எழுந்துள்ளது. அது வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில், தனபால் தான் வைத்திருந்த இரட்டைக்குழல் நாட்டு துப்பாக்கியைக் கொண்டு ராஜாகண்ணு மற்றும் கருப்பையாவை சுட்டார். இதில் கருப்பையாவின்வயிற்றிலும் ராஜாகண்ணுவின்கையிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன.

இதில், அவர்கள் இரண்டு பேரும் சுருண்டு விழுந்தனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வரவே தனபால் அங்கிருந்து தப்பித்துச் சென்றார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வழக்குப்பதிவு செய்து துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.