பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு அதிமுக சார்பில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவியில் இருந்தவர் தமிழ்ச்செல்வன். இவர்மீது பெரம்பலூர் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவரும், அதிமுக பெரம்பலூர் ஒன்றிய செயலாளருமான செல்வகுமார் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், "தனது மனைவி மகேஸ்வரி தமிழ்த் துறையில் முனைவர் பட்டம் பெற்று, தனியார் கல்லூரியில் வேலை செய்து வருகிறார். அவருக்கு பெரம்பலூர் மாவட்ட அரசு தமிழ்த் துறையில் வேலை வாங்கி தருவதாக தமிழ்ச்செல்வன் கூறினார். அந்த வேலைக்கு ரூ. 22 லட்சம் பணம் கேட்டார். அதன்படி கடந்த 2020ல் அவரிடம் ரூ.22 லட்ச பணத்தை கொடுத்துள்ளேன். ஆனால் அவர் கூறியபடி என் மனைவிக்கு வேலை வாங்கித் தரவில்லை.
நான் கொடுத்த ரூ.22 லட்சம் பணத்தையும் திருப்பி தரவில்லை. பலமுறை நேரிலும், போன் மூலமும் பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டேன். ஆனால் தமிழ்ச்செல்வன் பணத்தை தர முடியாது என்று கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே அவர் மீது நான் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து எனக்கு பணம் கிடைக்க உதவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர், காவல்துறையில் பண மோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.