Skip to main content

“என்னை பேருந்திலிருந்து இறக்கிவிட்டவர்களை மன்னித்துவிடுங்கள்... அவர்கள் குழந்தைகளை இது பாதிக்கும்” - மீன் பாட்டி உருக்கம்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

gh

 

குமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியில் உள்ள வாணியக்குடி எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வ மேரி அம்மாள் என்ற மூதாட்டி, குளச்சல் பகுதியில் மீன் விற்பனை செய்துவிட்டு தினமும் பேருந்தில் வீடு செல்வது வழக்கம். தலைச்சுமையாக மீன்களை விற்றுவிட்டு மாலை வேளையில் அரசு பேருந்தில் பயணித்துவந்த மூதாட்டி செல்வ மேரி அம்மாள், மீன் விற்பனை முடிந்து பேருந்தில் ஏறிய நிலையில் பேருந்து நடத்துநர், மீன் விற்றதால் நாற்றம் வருகிறது எனக் கூறி பேருந்திலிருந்து மூதாட்டியை இறக்கிவிட்டுள்ளார்.

 

என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மூதாட்டி, பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று தனது ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்துள்ளார். “எத்தனை முறை இதுபோல் கீழே இறக்கிவிட்டு நடந்தே போயிருக்கேன்... இதெல்லாம் ஒரு நியாயமா நீதியா” எனக் கண்ணீர் விட்டார். இதற்கும் அந்தப் பேருந்து ஓட்டுநர் நேரக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் வாயிலில் ஒன்றும் தெரியாததுபோல் நின்றுகொண்டிருந்தார். மூதாட்டியின் இந்த வேதனைக்குரல் குளச்சல் பேருந்து நிலையத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த சம்பவம் உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அரசு பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்ட அந்த மூதாட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, "என்னை பேருந்திலிருந்து இறக்கிவிட்டவர்களை மன்னித்துவிட வேண்டும், தண்டனை கொடுத்தால் அது அவர்களின் குழந்தைகளைப் பாதிக்கும். இனி அப்படி செய்யக் கூடாது,  உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர், நடத்துநர் மீது தீடீர் தாக்குதல்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
beaten on driver and conductor who blocked the government bus in Trichy

திருச்சி பேட்டைவாய்த்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (55). இவர் அரசுப்பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை, ராம்ஜி நகரில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அரசு நகரப்பேருந்தில் பணியிலிருந்தார். அவருடன் குளித்தலையை சேர்ந்த நடத்துனர் முருகானந்தமும் (32) பணியிலிருந்தார். பேருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக சென்ற போது, அதே வழியில் ஆட்டோவில் சென்ற 4 பேர், பேருந்தை மறித்து, அவர்களை முந்திச்செல்ல வழிவிடாமல் பேருந்தை இயக்கியதாக கூறி தகராற்றில் ஈடுபட்டனர். 

வாக்குவாதம் முற்றியதில் ஓட்டுநர் சக்திவேலையும் தடுக்க முயன்ற நடத்துநர் முருகானந்தத்தையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சக ஓட்டுநர்களுடன் சக்திவேல் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (36), சசிக்குமார் (32) இருவரை  கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Next Story

அரசுப் பேருந்தில் மாட்டிறைச்சி; நடுவழியில் இறக்கிவிட்ட நடத்துநர்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 conductor dropped government bus in the middle of the road for carrying beef

தர்மபுரி மாவட்டம் மொரத்தூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலம் என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு ஆரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அந்த வகையில் வழக்கம் போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோ மீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலம் பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி  மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கிவிட்டுள்ளார். 

பாஞ்சாலம் அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலத்தைப் பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலம் நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார். 

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.