/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fi-art_7.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்பனை செய்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர். மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராமர், மாதேஷ் எனப் பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அதோடு கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்த விவகாரத்தில் ராமர், சின்னதுரை மற்றும் ஜோசப் ராஜா ஆகிய 3 பேர் மீதும் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாதேஷ் நண்பர்களான பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சக்திவேல், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மீன் வியாபாரி கண்ணன் என இந்தச் சம்பவம் தொடர்பாக 12பேர் கைது செய்யப்பட்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/amar-art_0.jpg)
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் என்பவர் உயிரிழந்தார். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருக்கும் 12 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான மெத்தனால் விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் விற்பனையில் ஈடுபட்ட மாதேஷ்க்கு உதவியதாக அய்யாச்சாமி, தெய்வரா ஆகிய 2 பேர் கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Follow Us