forest six students forest officers

Advertisment

காட்டு முயல்களை வேட்டையாடி, அவற்றைச் சமைத்துச் சாப்பிட்டு அதனை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த 6 பேரை பிடித்த வனத்துறையினர், அவர்களுக்கு ரூ 90 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட பள்ளியில் படித்து வரும் 6 மாணவர்கள், கரோனா ஊரடங்கு சமயத்தில், அங்கிருந்த வனப்பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை வேட்டையாடி உள்ளனர்.பின்னர், அங்குள்ள வயல்காட்டில் அதனைச்சமைத்து விருந்து நடத்தி உள்ளனர். இதனை வீடியோ படம் பிடித்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராமதாஸ் மற்றும் வனத்துறை ஊழியர்கள், மாணவர்கள் 6 பேரையும் பிடித்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முயல்களை வேட்டையாடியதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் பேரில், 6 பேரும் சிறுவர்கள் என்பதாலும், பள்ளி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பதாலும், சிறைக்கு அனுப்பாமல், வழக்குப் பதிவு செய்து, தலா ரூ 15 ஆயிரம் வீதம் 6 பேருக்கும் ரூ 90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அதனை வசூலித்து, வனத்துறையினர் விடுவித்துள்ளனர்.

http://onelink.to/nknapp

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகையில், "பட்டுக்கோட்டையில் சிக்கிய 6 பேரும் பள்ளிச் சிறுவர்கள் என்பதாலும், அவர்கள் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்பதாலும் அபராதம் விதித்து, விடுவிக்கப்பட்டனர். கரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும் விளையாட்டாக வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டப்படியான குற்றம். இதில் ஈடுபடுவோர் அபராதம், சிறைத் தண்டனை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். மான், காட்டுப்பன்றி, கிளி, அணில், உடும்பு, கொக்கு எனச் சிறிய, பெரிய விலங்குகள், பறவைகள் எதையும் வேட்டையாடுவது சட்டப்படி குற்றம். நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். வனவிலங்குகளை வேட்டையாடுவோர் மீது இனிவரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.