நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் புலி ஒன்று கடந்த சில நாட்களாக நடமாடிவந்த நிலையில், இதுவரை 4 பேரை அது கொன்றுள்ளது. இதனால் புலியை எப்படியாவது பிடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் வனத்துறையினர் கடந்த 11 நாட்களாக எஸ்டேட் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவந்தனர். பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைத்து புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர்.
இதற்கிடையே, கும்கி யானைகளைக் கொண்டும் புலியைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், 11 நாள் தீவிர தேடுதல் வேட்டையின் பயனாக சிங்காரா வனப்பகுதியில் டி23 புலியை வனத்துறையினர் தற்போது சுற்றி வளைத்துள்ளனர். மயக்க மருத்து கொடுத்து புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் புலி பிடிபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.