Skip to main content

பக்தர்களின் உயிருக்கு வனத்துறை பொறுப்பில்லை! -மகாசிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு ஈஷாவுக்கு வனத்துறை கடிதம்

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

 

மகா சிவராத்திரி விழாவை 04.03.2019 மற்றும் 05.03.2019 ஆகிய நாட்களில் ஈஷா நிறுவனம் நடத்த உள்ளது. இந்த விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் உயிர்களுக்கு வன உயிரினங்களால் ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்கவும் உறுதி செய்யும்படி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொதுமக்கள் மற்றும் வன உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்தை தவிர்க்க உறுதி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. இதன்படி கோவை மாவட்ட வன அலுவலகர் வெங்கடேஷ், ஈஷா யோகா மையத்திற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

 

- ஈஷா நிறுவனம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி விழாவிற்கு வருகை தரும் வாகனங்கள் முள்ளங்காடு வனச்சோதனைச் சாவடி வழியாக செல்லும் வனச்சாலையில் செல்லக்கூடாது. 

 

- மகாசிவராத்திரி விழாவிற்காக வானவேடிக்கை, பட்டாசு வெடித்தல் போன்ற நிகழ்வுகள் கட்டாயம் தவிர்த்திட வேண்டும்.
 

- அதிக ஒளியை உமிழும் விளக்குகள் மற்றும் அதிக ஒலி மற்றும் இரைச்சலை ஏற்படுத்தும் ஒலி பெருக்கிகள் மற்றும் ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும். 
 

- மகாசிவராத்திரி விழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள், ஈஷா நிறுவனத்தின் தொண்டர்கள் விழா நடைபெறும் இடத்திற்கு மிக அருகாமையிலுள்ள போலாம்பட்டி பிளாக் II ஒதுக்கு வனத்திற்குள் எக்காரங்களுக்காகவும் நுழையக்கூடாது.
 

- மகாசிவராத்திரி விழா நடைபெறும் நாட்களில் வனத்திற்குள் நெருப்பு பரவ வாய்ப்பு உள்ள எவ்வித காரியங்களிலும் ஈடுபடக்கூடாது.

 

Isha


 

- பாலித்தீன் பை, பொதுமக்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களின் மீதம் மற்றும் பிற குப்பைகள் விழா நடைபெறும் இடத்திலிருந்து வனத்திற்குள் வராமல் தடுக்கப்பட வேண்டும். 
 

- மகாசிவராத்திரி விழா நடைபெறவுள்ள பகுதிகளுக்கு மின் விளக்குகள் உரிய முறையில் அமைத்திட வேண்டும். 
 

- பார்வை மாடம் அமைத்து பணியாளர்களை அமர்த்தி யானைகளின் நடமாட்டங்களை கண்காணிக்க வேண்டும். 
 

- வன எல்லையை ஒட்டி தற்காலிக சோலார் மின்வேலி அமைக்கப்பட வேண்டும். 
 

- மகாசிவராத்திரி நடைபெறும் நாட்களில் வனத்திற்குள்ளோ வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலோ வன உயிரினங்களால் விழாவிற்கு வரும் பக்தர்களின் உயிருக்கோ, உடமைகளுக்கோ சேதம் ஏற்பட்டால் அதற்கு இத்துறை பொறுப்பு ஏற்கவோ, இழப்பீடு, நிவாரணம் வழங்க இயலாது. இவ்வாறு தெரிவித்துள்ளார். 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

கொடைக்கானலில் காட்டுத்தீ; சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest fire in Kodaikanal;Warning to tourists

கோடை கால வெயில் வாட்டிவரும் நிலையில் வனத்துறை சார்பில் வனத்தில் வசிக்கும் விலங்குகளுக்காக தண்ணீர் தொட்டிகள் அமைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இதேநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் மறுபுறம் வனங்களில் ஏற்படும் காட்டுத்தீ விபத்துகள் வனத்துறைக்கு சவால் மிகுந்ததாக இருந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ள நிலையில் வனத்துறை தீவிரமாக அதை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது வறண்ட வானிலையே நிலவி வருகிறது. நேற்று முதல் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. சுமார் 100 ஏக்கருக்கு மேல் காட்டுத்தீ படர்ந்துள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமங்களில் பல இடங்கள் புகைமூட்டத்தில் சிக்கியுள்ளது. சாலை ஓரத்திலேயே காட்டுத்தீ மற்றும் புகை படர்ந்திருக்கும் காட்சிகள் அங்கு சுற்றுலா செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கி அதிகப்படியாக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வரும் நிலையில் காட்டுத்தீ சம்பவத்தால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கையும் விடுத்துள்ளது. வனத்துறை மற்றும் மின்சாரத் துறை, தீயணைப்புத் துறையினர் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் காட்டுத்தீயானது அணைக்கப்படுவதற்கான தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.