Skip to main content

நீர்நிலைகளின் மத்தியில் பறவைகளுக்காக அடர் வனம்... இளைஞர்களின் அடுத்த முயற்சி!

Published on 06/09/2019 | Edited on 06/09/2019

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குறைந்து வரும்  நிலத்தடி நீரை பாதுகாக்க பல வருடங்களாக பராமரிப்பு இன்றி பாழடைந்து கிடந்த நீர்நிலைகளை சீரமைத்து மழைத் தண்ணீரையும், காவிரி தண்ணீரையும் நிரப்பி நிலத்தடி நீரை பாதுகாப்போம் என்ற முயற்சியில் புதுக்கோட்டை,  தஞ்சை மாவட்ட இளைஞர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  இளைஞர்களின் சொந்த செலவில் தொடங்கப்பட்ட இந்த நீர்நிலை பாதுகாப்பு சீரமைப்பு பணிகளுக்கு இளைஞர்களின் ஆர்வத்தை பார்த்து தன்னார்வமுள்ள சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்கள்.

 

forest

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம்,  மாங்காடு,  வடகாடு, நெடுவாசல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் அதேபோல ஏம்பல் கிராமத்திலும் குளம் சீரமைப்பு பணிகளை இளைஞர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்.  ஆனால் குளங்கள் சீரமைக்க பட்டாலும் அதற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களை சீரமைக்க முடியாமல் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் அவற்றை அகற்ற அதிகாரிகளிடம் தொடர்ந்து மன்றாடி வருகின்றனர். அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை.

இதனால  கடந்த சில நாட்களாக பெய்த கனமழையிலும் குளங்களுக்கு தண்ணீர் வராமல் வீணாகிப் போனது. அதேபோல தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி பெரியகுளம் ஏரி சுமார் 550 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியை கைஃபா அமைப்பினர் கடந்த 70 நாட்களுக்கு முன்பு சீரமைக்க தொடங்கினார்கள். இந்த பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.  பலப்படுத்தும் கரைகளில் பனை விதைகள், வெட்டிவேர், பல வகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும் தொடங்கியுள்ளனர்.

அதேபோல மிகப் பெரிய ஏரியில் புதிய முயற்சியாக பறவைகள் உயிரினங்கள் வாழ மண் திட்டுகள் அமைத்து அதில் அடர் வனம் அமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர். ஏரிகளில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் உயிரினங்கள் அந்த அடர் வனத்தில் வாழ முடியும் இனப்பெருக்கம் செய்ய முடியும் அதனால் இந்த முயற்சியையும் மேற்கொண்டுள்ளனர். இதன் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களும் மீட்கப்படும் என்பதில் சந்தோசமே. அதேபோல தஞ்சை மாவட்டத்தில் ஒட்டங்காடு கிராமத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு உள்ள ஏரியை சீரமைத்த இளைஞர்கள் கரைகளில் வெட்டிவேர், மரக்கன்றுகள் நட்டதுடன் குளத்தின் நடுவில் ஆங்காங்கே மண் திட்டுகள் அமைத்து அடர்வனம் அமைத்து வருகின்றனர்.


 

forest

 

நாடியம் கிராமத்தில் மூன்றாண்டுகளுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை ரத்து செய்து குளம் சீரமைக்கும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். குருவிக்கரம்பை கிராமத்திலும் இளைஞர்கள் முயற்சிகள் நீர்நிலை சீரமைப்பு பணி தொடர்ந்து நடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் பல நீர்நிலைகளுக்கு கல்லணை தண்ணீர் நிரம்பி வருகிறது அதனால் இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் பல வருடங்களுக்கு பிறகு நீர்நிலைகளில் தண்ணீர் பார்க்கும் சந்தோஷமே தனி.

இளைஞர்களால் சொந்த செலவில் சீரமைக்கப்படும் நீர்நிலைகளில் குருங்காடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு உதவியாக அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பதே அந்தப்பகுதி மக்களின் எண்ணமும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.