Skip to main content

வனத்துறை விடுதியில் பெண்ணுடன் தங்கிய வனவர்கள் சஸ்பெண்ட்!!!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020
dd



இந்தியாவின் பழமையான புலிகள் காப்பகத்தின் முக்கியமானது நெல்லை மாவட்டத்தின் முண்டந்துறை மற்றும் களக்காடு புலிகள் காப்பகம். மேற்கு தொடர்ச்சி மலையோரத்தில் அமைந்திருக்கும் இப்புலிகள் காப்பகம் அரியவகை தாவரங்கள், புலிகள், சாம்பல் நிற அணில்கள், விழிகளை விரியவைக்கும் குரங்கு இனங்கள் ஆகியவற்றை கொண்டது என்பதால் அரசின் வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின்படி, இவைகள் காப்பகமாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளன. அதன் காரணமாகவே விலங்குகளின் இனப்பெருக்கத்தின் கேந்திரமாக அமைந்துவிட்டது.
 

இதில் முண்டந்துறை புலிகள் காப்பகத்தில், அம்பை, பாபநாசம், கடையம், முண்டந்துறை என நான்கு வனச்சரகங்கள் வருகின்றன. இவைகளில் அம்பை வனச்சரகத்தில் எஸ்டேட்களான மாஞ்சோலை பகுதிக்கு மேலே ஊத்துப் பகுதி தொடங்கி நாலு முக்கு குதிரை வெட்டி வரையிலான சாலைகளை சீரமைக்கும் பொருட்டு வனத்துறையின் சார்பில் முதற்கட்டப்பணிகள் நடந்து வருவதால் இதற்காக அந்தப் பகுதிக்கு அம்பை வனச்சரக வனவர் முருகேசன், பாபநாச வனச்சரக வனவர் மோகன் இருவரும், வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று தற்காலிகப் பெண் பணியாளர்களை அழைத்துக் கொண்டு வாகனத்தில் சென்றுள்ளனர். 


மலைமேல் குதிரை வெட்டிப் பகுதியில் இவர்கள் அளவீடு பணிகளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குள் இரவு விழுந்துவிட்டது. எனவே இரவுச் சூழல், மலைச் சாலையில் செல்ல முடியாது என்பதால் இவர்கள் அனைவரும் அங்குள்ள வனத்துறையின் விடுதியில் தங்கிவிட்டனர். ஆனால் இந்தத் தகவலை அவர்கள் முறைப்படி வனச்சரக அலுவலகத்தில் தெரிவிக்கவில்லையாம். அதிகாரிகளின் அனுமதியின்றி இவர்கள் தங்கிய சம்பவம் விவகாரமாகியிருக்கிறது.

 


இதுகுறித்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் (பொறுப்பு) கணேசன் நேரில் சென்று விசாரணை நடத்தியிருக்கிறார். உரிய அதிகாரிகளுக்கு முறையாகத் தெரியப்படுத்தாமல் இரவு நேரத்தில் பெண்களுடன் தங்கியதற்காக இரு வனவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தவிர தற்காலிகப் பணியாளர்களுக்குத் தலா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் மோகன் தாஸ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இது போன்று தங்கும் சம்பவங்கள் மலைமேலுள்ள வனத்துறை விடுதியில் நடப்பதால் ஒரு கோஷ்டியை மற்றொரு கோஷ்டி காட்டிக் கொடுத்துவிட்டது. மாவட்ட அளவிலான உயர் அதிகாரி டி.டி.யின் கவனத்திற்குப் போகவே, அவர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்ற பேச்சும் றெக்கை கட்டுகிறது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நெல்லை மக்களவைத் தொகுதி, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Nellai Lok Sabha Constituency Announcement of Congress candidate for the by elections!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுவையில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். அதேசமயம் தமிழகத்தின் மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆறாவது பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ளார். மேலும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டின் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே அளித்துள்ளார். 

Next Story

தமிழக பா.ஜ.க வேட்பாளர்கள் அறிவிப்பு; உடனடியாக பட்டியலில் நிகழ்ந்த மாற்றம்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இதனையொட்டி தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகள் முடிவுற்றுள்ளன. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று (20.03.2024) முதல் தொடங்கி உள்ளது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) வெளியிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி -  பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர்  ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

Tamil Nadu BJP Candidates Announcement; Immediate list change

அதன்படி தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  த.மா.காவுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட இருப்பதால், திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.