Skip to main content

வெவ்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும்! - தமிழக அரசுக்கு கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு வலியுறுத்தல்! 

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன், த.செ.கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன், கு.ராமகிருட்டிணன், தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, கே.எம்.சரீப், இனிகோ இருதயராஜ், வன்னி அரசு, நெல்லை முபாரக், ப. அப்துல் சமது, பெரியார் சரவணன் உள்ளிட்டோர் அடங்கிய கரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு அரசை வலியுறுத்தியுள்ளது. 
 

இது தொடர்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. சர்வதேச அளவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ளது போன்று பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளன. இதன் காரணமாக ஆங்காங்கே வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். 
 

 

foreign tamil peoples and other state tn govt request


இந்தியாவிலும் பல்வேறு காரணங்களுக்காக வெளி மாநிலங்களுக்குச் சென்றவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படிச் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தவித்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை மீண்டும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் நிலை மிகவும் மோசமாகக்கூடிய சூழல் உருவாகும் என்பதால், அவர்களை உடனடியாகத் தமிழகம் அழைத்துவரும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக  மேற்கொள்ள வேண்டும். கேரள அரசு அதற்கான முன்னெடுப்புகளை துவக்கியுள்ளது.
 

http://onelink.to/nknapp


அதுமட்டுமின்றி வெளிநாடு வாழ் மலையாளிகளுக்கு ஹெல்ப்லைன், டெலிமெடிசின் சேவைகளை கேரளா அரசு அமைக்க முன்வந்துள்ளது. அதன் முதல்கட்ட நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் வசிக்கும் தம் மாநில மக்களுக்கு மருத்துவ வசதிகள் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்ய உதவி மையங்களை கேரள அரசு அமைத்துள்ளது.
 

foreign tamil peoples and other state tn govt request


தனது மாநிலம் சார்ந்த மக்களை மீட்கவும், நோய்த் தொற்றிலிருந்து அவர்களைக் காக்கவும் தொடர் முயற்சிகளை மேற்கொள்ளும் கேரள அரசைப் போன்று தமிழக அரசும் பல்வேறு வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக துவக்க வேண்டும். மேலும், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா முன்னெச்சரிக்கை காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனையில் தொற்று இல்லை என்று சான்றளிக்கப்பட்டவர்களும் தமிழகம் திரும்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். 

அவர்களையும் தமிழகம் அழைத்துவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநிலம் சார்ந்த மக்களுக்குச் சிகிச்சை அளிக்க அதிக முனைப்புக் காட்டும் நேரத்தில், பிற மாநிலத்தவர்கள் மீதான அவர்களின் அணுகுமுறை திருப்திகரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருவதால், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்களையும் தமிழகம் அழைத்து வந்து அவர்களைத் தமிழக அரசின் சார்பில் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்திடவும் தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்; அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த ‘ஜாக்டோ - ஜியோ’

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Indefinite strike; Jacto refused to accept the minister's request - Geo

திட்டமிட்டபடி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என  ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில், தமிழக அரசு போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி முதல் 'ஜாக்டோ ஜியோ' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ. வேலு, ஜாக்டோ ஜியோ சங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதனையடுத்து, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதிநிலைக்கு ஏற்ப அரசு பணிவுடன் பரிசீலிக்கும்.

கலைஞர் வழி நடக்கும் அரசு, ஊழியர்களின் நலனை எப்போதுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரும்பணியை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தை அரசு உணர்ந்தே இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டு அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ தரப்பிலிருந்து, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிப்பதாகவும், தங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் எனவும் நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்றும் பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்று ‘ஜாக்டோ ஜியோ’ அறிவித்துள்ளது.