பெண்களை ஏமாற்றி தொடர் திருமணம் செய்து வரும் காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர்மீது பாதிக்கப்பட்ட பெண் வீட்டார் திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முகமதுரபிக். இவர் வெளிநாடு காவல்துறையில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கூத்தாநல்லூரை அடுத்துள்ள அத்திக்கடை எனும் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இதற்காக பெண் வீட்டாரிடம் இருந்து 150 சவரனுக்கு மேல் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த கை கடிகாரம் ஆகியவற்றையும் சீர்வரிசையாக பெற்றுக்கொண்டுள்ளார். பின்னர் மனைவியின் நடத்தையில் சந்தேகம் எனகூறி மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
பிறகு தனது சொந்த ஊரான நீடாமங்கலத்திற்கு வந்த முகமது ரபீக், மீண்டும் 150 சவரன் நகைகள், விலை உயர்ந்த கை கடிகாரம் என சீர்வரிசையாக பெற்றுக்கொண்டு தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவருடனும் சிலகாலம் வாழ்ந்துவிட்டு. பின்னர், 2வது மனைவி மீதும் வழக்கம்போல நடத்தை சரியில்லை என பழிபோட்டுவிட்டு அவரையும் விவாகரத்து செய்துவிடுகிறார்.
இந்தநிலையில், தற்போது மூன்றாவது முறையாக தாயகம் திரும்பிய முகமதுரபிக் தனது மூன்றாவது திருமண அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அதாவது தஞ்சை மாவட்டம், மதுக்கூர் பகுதியில் உள்ள செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் வகையில் பெண் வீட்டாரிடம் மிடுக்கான காவல்துறையில் அதுவும் வெளிநாட்டு காவல்துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுவதாக கூறி அடுத்த டார்க்கெட்டை தொடங்கியுள்ளார் முகமதுரபிக்.
வருடத்திற்கு ஒரு மனைவி என தனது வாழ்க்கையை அனுபவித்துவிட்டு அதன் பின்னர் பெண் வீட்டார் கொடுத்த சீர்வரிசை பொருட்களை அபகரித்துகொள்வதற்காக பெண்ணின் நடத்தையில் பழியைபோடும் முகமதுரபிக்கிடம், இனி எந்தவொரு பெண்ணும் ஏமாந்து விடகூடாது என்ற நோக்கத்தில் முதல் மனைவியின் குடும்பத்தார், முகமதுரபிக் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி திருவாரூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.