Food Safety Department officials inspect Dharmapuri restaurants

தர்மபுரியில் உணவகங்களில் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சிகளைப் பயன்படுத்தியது உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் தெரிய வந்துள்ளது.

Advertisment

தர்மபுரி மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், கந்தசாமி, நந்தகோபால் ஆகியோர் தர்மபுரி நகர, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நடுத்தர மற்றும் பெரிய உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 6 உணவகங்களில் 25 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி சமைப்பதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து அவற்றை உடனடியாக பறிமுதல் செய்து, அழித்தனர். கெட்டுப்போன இறைச்சியை வைத்திருந்த உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தர்மபுரி பேருந்து நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையின்போது, உரிமம் பெறாமல் சில உணவகங்கள் செயல்பட்டு வருவது தெரிய வந்தது. அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

இது தொடர்பாக உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், “உணவகங்களில் கெட்டுப்போன பழைய கோழி, ஆட்டிறைச்சிகளை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்து உள்ளோம். பழைய இறைச்சியை பயன்படுத்தியதாக சில உணவகங்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில கடைகளுக்கு முன்னறிவிப்பு அறிவிப்புதரப்பட்டுள்ளது. அனைத்து உணவகங்களும், உணவுப்பொருள் விற்பனை செய்வோரும் உணவுப்பாதுகாப்புத்துறை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பாலிதீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளில் பொட்டலம் கட்டித்தரக்கூடாது” என்றனர்.