Advertisment

கரோனா வைரஸ் மூலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறவர்கள். அவ்வபோது அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் வெளியே வந்து போகிறார்கள். இருந்தாலும் வேலை இல்லாததால் பொதுமக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள். அதுபோல வனவிலங்குகளும் கூட சரி வர உணவு கிடைக்காமல் இருந்து வருகிறது.

அதுபோல்தான் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுலா தளமாக இருந்து வருவதால் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து போவது வழக்கம். இப்படி வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பலர் மலையில் ரோட்டு ஓரங்களில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவு, பழங்கள், காய்கணிகள் மற்றும் பிஸ்கட்டுகளை போட்டு விட்டு போவார்கள். அந்த உணவுகளைதான் குரங்குகள் உண்டு வாழ்ந்து வந்தன.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதில்லை இதனால் மலையில் சுற்றித்திரியும் குரங்குகளுக்கு உணவு கிடைக்காமல் பரிதவித்து வந்தன. இந்த விஷயம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் இளைய மகனான ஜெயபிரதீப்பின் காதுக்கு எட்டவே உடனே வாழைப்பழம், தர்பூசணி, கேரட், ஆப்பிள், கொய்யா உள்பட சில பழங்களையும், காய்கறிகளையும் பல ஆயிரங்களுக்கு வாங்கி தனது ஆதரவாளர்கள் மூலம் மலையில் சுற்றித் திரியும் குரங்குகளுக்கு வழங்க சொல்லியுள்ளார்.

Advertisment

அதன் அடிப்படையில் ஜெயபிரதீப் ஆதரவாளர்கள், உடனே ஒரு லாரியை வாடகைக்கு பிடித்து பழங்கள். காய்கனிகளையும் ஏற்றி கொடைக்கானல் மலைப் பகுதியான காட் ரோடு, ஊத்து, பெருமாள் மலை உள்பட சில பகுதிகளில் உள்ள ரோட்டு திட்டுகளில் வைத்தனர். அதை கண்டு அங்கு பசியால் சுற்றி திரிந்து கொண்டிருந்த குரங்குகள் தாவி தாவி வந்து அந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு சென்றன. பசியால் வாடிய குரங்குகளுக்கு உணவுகளை வழங்கியது கண்டு அப்பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள் பாராட்டியுள்ளனர்.