Skip to main content

எஃப்.எம். ரேடியோவில் வெடிகுண்டு வைத்து தம்பியைக் கொலை செய்த அண்ணன்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

fm radio salem brothers police investiogation

 

சேலம் அருகே, நில வழித்தட பிரச்னையில் கூடப்பிறந்த தம்பியையே எஃப். எம். ரேடியோவில் வெடிகுண்டு வைத்துத் திட்டமிட்டு கொலை செய்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மணி (50). விவசாயி. ஜூன் 17- ஆம் தேதியன்று, தன் வீடு அருகே தோட்ட வழித்தடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றைக் கண்டெடுத்தார். வீட்டிற்கு எடுத்துச் சென்று அதில் உள்ள மின் வயர்களை சுவிட்ச் போர்டில் சொருகியபோது, திடீரென்று எஃப்.எம் ரேடியோ பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. 

 

இதில், விவசாயி மணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடைய முகமும், ஒரு கையும் சிதைந்தன. சம்பவத்தின் போது வீட்டில் இருந்த அவருடைய பேத்தி சவ்ரூபியா (10), உறவினர்கள் நடேசன் (65), வசந்தகுமார் (37) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். 

 

இச்சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மணியின் வீட்டில் வெடித்தது என்ன வகையான பொருள் என்றோ, அச்சம்பவம் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என சம்பவத்தன்று காவல்துறையால் எந்த ஒரு யூகத்துக்கும் வர முடியவில்லை. 

 

சம்பவ இடத்தில் இருந்து டெட்டனேட்டர், ஜெலட்டின் ஸ்டிக்ஸ் உள்ளிட்ட பொருள்களின் சிறு துகள்களை தடயவியல் நிபுணர்கள் கண்டெடுத்தனர். வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும் அதை ஊர்ஜிதம் செய்தனர். இதையடுத்தே காவல்துறையினர், மர்ம நபர்கள் திட்டமிட்டு வெடி வைத்து மணியைக் கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். 

 

இதுகுறித்து விசாரிக்க, சேலம் மாவட்ட எஸ்.பி., தீபா கனிகர் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. உமா சங்கர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் அம்சவள்ளி, ஆனந்தன், குலசேகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கொலையுண்ட மணிக்கும், அவருடைய அண்ணன் செங்கோடன் (64) என்பவருக்கும் தோட்டத்திற்குச் செல்லும் வழித்தடம் தொடர்பாக உரசல் இருந்து வந்த விவகாரம், காவல்துறைக்குத் தெரிய வந்தது. மணியை டார்கெட் செய்யக்கூடியவர்கள் யார் யார்? வேறு என்னென்ன மோட்டிவ்கள் என பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறைக்கு எதிலும் திடமான தடயங்கள் கிடைக்கவில்லை.

 

fm radio salem brothers police investiogation

 

இந்நிலையில்தான், சில நாள்களுக்கு முன்பு மீண்டும் செங்கோடனை அழைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதற்கு அடுத்த நாள் அவர், வீடு அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரிடம் மீண்டும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

 

அப்போது, தன்னுடைய விவசாய நிலத்திற்குச் செல்வதற்கு மணியின் நிலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் அவர் வழித்தடத்திற்கு நிலத்தை விட்டுத்தர மாட்டேன் என்று சொன்னதால் ஏற்பட்ட முன்விரோதத்தால் தம்பி என்றும் பாராமல் கொலை செய்து விட்டதாகக்கூறி தேம்பித்தேம்பி அழுதார். 

 

கொலையான மணிக்கு செங்கோடன் உள்பட மொத்தம் மூன்று சகோதரர்கள். நான்கு பேரும் தலா 3 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளனர். இவர்களின் நிலத்துக்குள் செல்ல வழித்தடம் இல்லாததால், பக்கத்துக் காட்டுக்காரர் ஒருவரிடம் 20 லட்சம் ரூபாய் கொடுத்து வழித்தட போக்குவரத்திற்காக நிலத்தை வாங்கியுள்ளனர். செங்கோடன் தவிர மற்ற மூவரும் வழித்தட நிலத்திற்கான பங்குத்தொகையைக் கொடுத்துவிட்டனர். செங்கோடன், வழித்தட கிரயத்துக்கான தொகையைத் தர முடியாது என்று கறாராகச் சொல்லிவிட்டார். 

 

இதனால் மணி, தாங்கள் வாங்கிய நிலத்தின் வழித்தடத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று செங்கோடனுக்குத் தடை விதித்தார். இதையடுத்து அவரும், இன்னொருவரின் நிலத்தின் வழியாக தன் நிலத்துக்குச் சென்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அந்த நிலத்துக்காரருடனும் செங்கோடனுக்கு பிரச்சினை ஏற்பட்டதால் அந்த வழித்தடத்தையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

 

இதனால் கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட செங்கோடன், ஏற்கனவே வாங்கிய வழித்தடத்தில் தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்குரிய செலவுத்தொகையை தற்போது தர தயாராக இருக்கிறேன் என்றும் மணியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு மணி கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

 

இதனால் மணியை கொலை செய்யத் திட்டமிட்டு, கடந்த ஒரு மாதமாக அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இதற்காக கிணறு தோண்ட வெடி வைக்க வேண்டும் என்று கூறி, நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ஒரு வெடிமருந்து கடையில் இருந்து டெட்டனேட்டர்களையும், ஜெலட்டின் குச்சிகளையும் வாங்கி வந்துள்ளார். அதன்பிறகு, புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து புதிதாக ஒரு எஃப்.எம். ரேடியோ வாங்கியிருக்கிறார்.

 

செங்கோடனுக்கு கொஞ்சம் எலக்ட்ரிகல் வேலைகள் தெரியும் என்பதால், எஃப்.எம். ரேடியோ பெட்டிக்குள் டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகளைப் பொருத்தி, அதை மின்சார வயருடன் இணைப்புக் கொடுத்திருந்தார். சுவிட்ச் போர்டில் பிளக்கை சொருகினால் வெடித்து விடும் வகையில் வேலைகளைக் கனகச்சிதமாகச் செய்திருந்தார்.

 

மணிக்கு அவ்வப்போது மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், அந்த வீக்னஸையும் தன் திட்டத்துக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் செங்கோடன். ஒரு பையில் வெடிகுண்டுடன் கூடிய எஃப்.எம் ரேடியோ, அத்துடன் ஒரு குவார்ட்டர் மது பாட்டில், சைடு டிஷ் ஆக மிக்சர் பொட்டலம் ஆகியவற்றை ஒன்றாக போட்டு, மணி அன்றாடம் தோட்டத்துக்குச் செல்லும் வழித்தடத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். 

 

இந்த சூழ்ச்சிகளை அறியாத மணி, அந்த ரேடியோவை எடுத்துச்சென்று சுவிட்ச் போர்டில் சொருக, வெடித்துச்சிதறி பலியாகியிருக்கிறார். செங்கோடன் எல்லாவற்றையும் திட்டமிட்டு தெள்ளத்தெளிவாக கொலையை அரங்கேற்றியிருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

 

http://onelink.to/nknapp

 

இதையடுத்து செங்கோடனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவருக்கு டெட்டனேட்டர் சப்ளை செய்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர், மணி கொலையுண்ட மறுநாளில் இருந்தே தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர். 

 

நில வழித்தட பிரச்னையில், தம்பியையே திட்டமிட்டு வெடிகுண்டு வைத்து அண்ணன் கொலை செய்த சம்பவம் பனமரத்துப்பட்டி சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.