
அவினாசி சாலையில், ரூபாய் 1,600 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம், கோல்டுவின்ஸ் என்ற இடத்தில் இருந்து உப்பிலிபாளையம் வரை 10.10 கி.மீ. தூரத்திற்கு ரூபாய் 1,600 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து, சசி அட்வர்டைசிங் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், 'நெடுஞ்சாலை சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றாமலும், மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தாமலும், நோட்டீஸ் வழங்காமலும் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், திட்டத்திற்குத் தடைவிதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (17/03/2021) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரூபாய் 1,600 கோடியில் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பாக தமிழக அரசு, நில ஆர்ஜித அதிகாரி கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஜூன் 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.