Skip to main content

குப்பைக்கு போகும் பூக்கள்... விவசாயிகளின் கண்ணீர்...

Published on 25/09/2019 | Edited on 25/09/2019

நெல் விவசாயத்தோடு காய்கனி, தானியங்களை விளைவித்து கொண்டிருந்த விவசாயி வீட்டு பெண்கள் காட்டுப் பூக்களை பறித்து தலையில் வைத்துக் கொண்டனர். இந்தநிலையில்தான் வறட்சி வாட்டத் தொடங்கியபோது காய்கனி, தானியங்களோடு ஓரமாக மனம் வீசும் மல்லிகை, கனகாம்பரம் என மலர்களையும் பயிரிடத் தொடங்கினார்கள். மேலும் வறட்சி வதைக்க முழுக்க முழுக்க மலர்கள் உற்பத்தியை செய்யத் தொடங்கினார்கள் விவசாயிகள்.

 

flower

 

இது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதன்மையாக பொறுந்தும். 1980 வரை அனைத்து விவசாயிகளையும்போல காய், கனி, தானியங்களை பயிரிட்டனர். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட போது வறட்சியை தாங்கி வளரும் மலர் செடிகளை வளர்க்கத் தொடங்கினார்கள். முதலில் கனகாம்பரம் அதிகமாக பயிரிடப்பட்டது. தினசரி காலை ஒவ்வொரு தோட்டமாக சென்று மலர்களை வாங்கிவரும் வியாபாரிகள் மொத்தமாக வெளியூர்களுக்கு அனுப்பினார்கள்.

அதன் பிறகு மல்லிகை, முல்லை, போன்ற பூ செடிகளையும் விவசாயிகள் பயிரிடத் தொடங்கியதும் மாவட்டத்தில் பெரிய சந்தை கீரமங்கலத்தில் உருவானது. கீரமங்கலத்தை சுற்றி செரியலூர், பனங்குளம், குளமங்கலம், நெய்வத்தளி, பாண்டிக்குடி, பெரியாளூர், கொத்தமங்கலம், சேந்தன்குடி, நகரம், மேற்பனைக்காடு, மாங்காடு, வடகாடு, அணவயல், கறம்பக்காடு என்று 100 கிராமங்களிலும் ஆலங்குடி அருகில் உள்ள மழையூர், வம்பன், திருவரங்குளம் பகுதியில் உள்ள சுமார் 100 கிராமங்களிலும் முழுமையாக மலர்கள் சாகுபடியை விவசாயிகள் நம்பினார்கள்.
 

 Flowers that go to the trash ... tears of farmers ...

 

ஒவ்வொரு நாளும் தங்கள் தோட்டங்களில் பறிக்கப்படும் மலர்களை கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, கைகாட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மலர் கமிசன் கடைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள். அதனால் இந்த பகுதியில் காலை 5 மணி முதல் 11 மணி வரை கடைவீதி பரபரப்பாகவே இருக்கும். அந்த நேரங்களில் செல்லும் அரசு, தனியார் பேருந்துகளில் பூ மூட்டைகள் பயணிக்கும். ஒரு நாளைக்கு 15 டன் வரை மலர்கள் சந்தைக்கு வந்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி, வாடாமல்லி, செண்டி, இப்படி அனைத்து வகை மலர்களும் உற்பத்தி செய்யப்படும் விவசாய பூமி. இவ்வளவு மலர்கள் உற்பத்தி செய்யப்படுவதால் நறுமண திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை, மலர்களை வைத்து பாதுகாக்கும் குளிர் சாதன கிடங்கு வேண்டும் என்று விவசாயிகள் வைத்த கோரிக்கைகளை அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் காது கொடுத்து கேட்பார்கள். அதன்பிறகு அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டும். இப்படி ஒரு வசதி இல்லாததால் கடந்த சில வருடங்களாக ஒரு நாளைக்கு ஒரு டன் முதல் 3 டன் வரை பூக்கள் குப்பைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதுதான் வேதனை. 

விவசாயிகள் வியர்வை சிந்தி உற்பத்தி செய்த மலர்களை குப்பையில் அள்ளிக் கொட்டுவதைப் பார்க்கும் போது மனது வேதனைப்படுகிறது. அதேபோலதான் தற்போது ஒரு நாளைக்கு 3 டன்கள் வரை மலர்கள் பேரூராட்சி குப்பை வண்டிகளில் அள்ளப்படுகிறது. காரணம் என்ன என கேட்டால் உற்பத்தி அதிகம், விற்பனை குறைவு என்று ஒற்றை வரியில் பதில் சொல்கிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ. 30 வரை செலவு செய்து உற்பத்தி செய்யும் விவசாயிக்கு கிடைக்கும் விலை ரூ. 5. இதைப் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வராதா?

இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறும் போது.. 1975 – 80 காலக்கட்டத்தில் கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் கனகாம்பரம் பூக்கள் தான் விவசாயம். அப்ப பால் வெண்டர்கள் போல பூ வியாபாரிகள் வீட்டுக்கு வீடு வந்து பூக்களை வாங்கிட்டு போய், தஞ்சாவூர், திருவாரூர், சென்னை வரை அனுப்புவாங்க. அப்பறம் வறட்சி ஏற்படதான் எல்லா விவசாயிகளும் மலர்கள் விவசாயத்திற்கு இறங்கிட்டாங்க. அதன் பிறகு அதாவது 1990 க்கு பிறகு.. மல்லிகை, முல்லை, காட்டுமல்லி, செண்டி, வாடாமல்லி, கோழிக்கொண்டை இப்படி பல மலர்களும் உற்பத்தி தொடங்கியது. அதனால் முதலில் கீரமங்கலத்தில் மலர் கமிசன் கடைகள் உருவானது. விவசாயிகள் தங்களிடம் விளையும் மலர்களை கமிசன் கடைகளுக்கு கொண்டுபோய் கொடுப்பது வழக்கம். அப்பறம் அனைத்து மலர்களும் விவசாயம் செய்ய தொடங்கியாச்சு. தஞ்சை, நாகை, திருவாரூர், வேளாங்கன்னி, வேதாரண்யம் வரை பூ வியாபாரிகள் வந்து பூ வாங்கிச் செல்கிறார்கள். 

 

flower

 

உற்பத்தி அதிகமாக இருப்பதால் சென்டு தொழிற்சாலையும், ஏசி. குடோனும் ஏற்படுத்த ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் கோரிக்கை மனு கொடுக்கிறது வழக்கம். மனுவை வாங்குற அத்தனை கட்சிகளும் விவசாயிகளுக்காக செய்றோம்னு சொல்லிட்டு போவாங்க. அவ்வளவு தான். அடுத்தடுத்த தேர்தலுக்குதான் அந்த கோரிக்கை பற்றி பேசுவாங்க. அதனால இப்ப எங்கள் உழைப்பு, பணம் அத்தனையும் குப்பைக்கு போகுது.

திருவிழாக்கள், முகூர்த்த நாட்களில் விலை கூடுதலாக மலர்கள் விற்பனை ஆகும் மற்ற நாட்களில் விலை குறைவாக இருக்கும். ஆனால் இப்ப மலர்களை விற்க முடியாமல் குப்பையில் கொண்ட வேண்டிய நிலை வந்திருச்சு. இதைப் பார்க்கும் போது ஒவ்வொரு விவசாயியும் கண்ணீர் தான் வடிக்கிறார்கள்.

இதற்கு காரணம் ஐப்ரிட் விதைகள் வந்தது தான். அதாவது செண்டி, உள்ளிட்ட மலர்கள் முன்பு நம்ம நாட்டு ரகம் உற்பத்தி செஞ்சோம் எந்த பக்கவிளைவும் இல்லை. அதனால கோயில்களில் மாலைகள் போட்டாங்க. ஆனா மலர்களின் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று வியாபாரிகள் ஐப்ரிட் செண்டி விதைகளை விவசாயிகளுக்கு கொடுத்ததால அதை வாங்கி பயன்படுத்தும் போது செலவும் அதிகம். அதாவது ரொம்ப பாதுகாப்பா வளர்க்க அதிக செலவு செய்யனும். அப்படி செலவு செஞ்சு அந்த சென்டி பூக்களை பறிக்கும்போது கைகளில் அரிப்பு, அதை எடை போடும் தொழிலாளிக்கு அரிப்பு, மாலை கட்டுபவருக்கு அரிப்பு, மாலையை வாங்கி சுவாமிக்கு போடும் குருக்கலுக்கும் அரிப்பு. இதைப் பார்த்து குருக்கள்கள் செண்டி மாலை வேண்டாம் என்று தடை போட்டுவிட்டார்கள். அதனால செண்டிப் பூக்கள் விற்பனை குறைந்துவிட்டது. நம்ம நாட்டு செண்டியால இந்த பிரச்சணை இல்லை.

அதேபோல சம்பங்கி பூக்களிலும் ஐப்ரிட் வந்துவிட்டது. அதுவும் ஒரே நாளில் விற்கவில்லை என்றால் அடுத்த நாள் கெட்டுப் போகும். இப்படி நம்ம நாட்டு ரகம் மாறியதால்தான் இப்ப குப்பைக்கு போற அளவுக்கு போயிடுச்சு. அதனால ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு நாளும் நட்டம் வருது. ஒரு நாளைக்கு 3 டன் மலர்கள் குப்பைக்கு போனால் என்ன செய்றது. அரசாங்கம் இனியாவது மலர் விவசாயிகளை காப்பாற்ற செண்டு தொழிற்சாலை, குளிரூட்டப்பட்ட பாதுகாப்பு கிடங்கு கொடுத்தால் விவசாயிகள் வாழ முடியும் என்றனர் வேதனையாக.

அதேபோல ஐப்ரிட் மலர்களை தவிரத்து மீண்டும் நம்ம நாட்டு மலர்களை உற்பத்தி செய்ய வியாபாரிகள் விவசாயிகளுக்கு விதைக்ள கொடுத்தால் விவசாயிகளையும், மலர் உற்பத்தியையும் காப்பாற்றலாம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விதிமுறையால் மந்தமான ஈரோடு ஜவுளி சந்தை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

ஈரோடு கனி மார்க்கெட் பகுதியில் தினசரி கடை, வார சந்தை நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜவுளி வார சந்தைக்காக கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளைக் கொள்முதல் செய்வார்கள்.

சாதாரண நாட்களில் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். இந்த ஜவுளி சந்தையானது ஈரோடு பார்க் மட்டுமின்றி சென்ட்ரல் தியேட்டர், அசோகபுரம் போன்ற பகுதிகளிலும் செயல்படும். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ஆம் தேதி வெளியானது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் ரூ.50,000 க்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லும் பணங்களைத், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதனால் ஈரோடு ஜவுளி வாரச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருவதில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் ஜவுளி வார சந்தைக்கு அறவே வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் முடங்கிப்போய் உள்ளது. தற்போது ஆன்லைனில் ஒரு சில ஆர்டர்கள் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சில்லறை விற்பனையும் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. இன்று 10 சதவீதம் மட்டும் சில்லறை வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். மொத்த வியாபாரம் சுத்தமாக நடைபெறவில்லை. தேர்தல் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டால்தான், ஜவுளி வாரச்சந்தை மீண்டும் பழையபடி சூடு பிடிக்க தொடங்கும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் கோடிக்கணக்கில் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.