Skip to main content

வடகிழக்கு பருவமழைக்கு முன்பே பயிர்களை அழித்த வெள்ளம்; விவசாயிகள் வேதனை

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

Floodwaters destroyed crops before northeast monsoon

 

தீபாவளிக்கு முன்பு பெய்த மழையினால் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் சூழ்ந்த தண்ணீர் வடிவதற்குள் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், கோரைத்திட்டு, நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றின் கழிமுனைப் பகுதியாகும். ஒவ்வொரு ஆண்டும் பெய்து வரும் மழை வெள்ளம் முற்றிலுமாக இந்த பகுதி வழியாகவே கடலில் வடியும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, தென்மேற்கு பருவமழையினால் இதுவரை இல்லாத அளவிற்கு ஆறு முறை கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடைக்கோடி கிராமங்களில், 1200 ஏக்கர்களில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நேரடி விதைப்பு மற்றும் நடவு சம்பா பயிர்கள், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட தொடர் வெள்ளப்பெருக்கால் தண்ணீர் சூழ்ந்து இருந்தன. தேங்கியிருந்த  தண்ணீர் வடிய முடியாமல் 10 நாட்களுக்கும் மேலாகப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தன.

 

கடந்த நான்கு நாட்களாகக் கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் விளைநிலங்களில் தேங்கியிருந்த தண்ணீரும் வடியத் தொடங்கியது. அழுகிய பயிர்கள் போக எஞ்சிய பயிர்களைக் காப்பாற்ற உரங்கள் இடும் பணிக்கு விவசாயிகள் தயாராகி வந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 

"கடந்த ஆண்டு இதேபோல் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பயிர்க்காப்பீடு செய்தும் காப்பீட்டு நிறுவனமும் அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு விவசாயிகளை ஏமாற்றிவிட்டனர். கடந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்காததால் இந்த ஆண்டு கடனை வாங்கி சாகுபடியைத் தொடங்கினோம். தொடக்கத்திலேயே அழித்துவிட்டது. இந்த ஆண்டு காப்பீட்டுத் தொகை கட்டுவதற்குக் கூட மிகுந்த சிரமம் ஏற்பட்டிருக்கிறது." என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.