Skip to main content

வெள்ளக்காடான கன்னியாகுமரி..! 

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Flooded Kanyakumari ..!

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11ஆம் தேதியிலிருந்து வரலாறு காணாத பேய் மழையால் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதில் நூற்றாண்டுகள் பல கண்ட வில்லுக்குறி இரட்டைகரை சானல் பாலம் உடைப்பு ஏற்பட்டதால் வில்லுக்குறி - பேயங்குழி சாலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாலைகளை மூழ்கடித்ததோடு திருவனந்தபுரம் - நாகா்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் ஒருநாள் முமுவதும் போக்குவரத்து தடை ஏற்பட்டது. 

 

அதேபோல் நாகர்கோவில் ஒழுகினாசேரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நாகர்கோவில் - நெல்லை போக்குவரத்து நாள் முழுவதும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். மேலும், முக்கிய சந்தையான அப்டா மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட கடைகள் தண்ணீரில் மூழ்கின. மேலும், முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, சிற்றார் 2 திறக்கப்பட்டதால் மலைக் கிராமங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தாமிரபரணி, வள்ளியாறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. இதனால் 90க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள், நகரங்கள் என மூழ்கடிக்கப்பட்டு குடியிருப்புகள், விவசாய நிலங்கள் ஆகியவை தண்ணீரில் மிதந்தன. இதில் சுசீந்திரம், தேரூர், கற்காடு, கடுக்கரை, பூதப்பாண்டி, காட்டுபுதூர், வடசேரி, ஆஸ்ரமம், தோவாளை, திருப்பதிசாரம், குழித்துறை, நித்திரவிளை, தேங்காய்பட்டணம், புதுக்கடை, தக்கலை போன்ற பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்தனர். இதில் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். இவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில மீட்பு படையினர் படகு மூலம் சென்று மீட்டு முகாம்களில் தங்கவைத்தனர். இவர்களுக்கு அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர் கண்காணிப்பு மூலம் உணவுகள், மருந்துகள் கொடுக்கப்பட்டன. 3 நாட்களில் 4,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

 

இதைப்போல் முக்கிய கோவிலான சுசீந்திரம் தாணுமாலையன் கோவில் மற்றும் வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில் ஆகியவற்றில் வெள்ளம் சூழ்ந்து பூஜைகள் தடைப்பட்டன. மேலும், ரயில் தண்டவாளங்களில் 30 கிமீ தூரத்துக்கு வெள்ளம் நிரம்பியதாலும் மேலும் 11 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதாலும் நாகர்கோவிலில் இருந்து கேரளா, சென்னை மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் 15 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

 

தமிழ்நாடு அமைச்சர்கள் மனோ தங்கராஜ், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பெரியகருப்பன் மற்றும் ஆட்சியர் அரவிந்த், கண்காணிப்பு அதிகாரி, ஜோதிநிர்மலா, காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினார்கள். இவர்களோடு அந்தந்த பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காவல்துறை பெண் அதிகாரிகளும் துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தரும்படி அவர்களோடு இருந்தனர். அரசு இயந்திரங்களும் அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க வேகமாக செயல்பட்டதால் மக்களுக்குப் பெரியளவு உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது ஆறுதல் தருவதாக மக்கள் கூறுகின்றனர். 

 

குமரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவு வெள்ளப் பாதிப்புகளுக்குக் காரணம் விளைநிலங்கள் மற்றும் பொது இடங்கள் ஆக்கிரமிப்பும் விளைநிலங்களில் குடியிருப்புகள் கட்டியிருப்பதாலும்தான் என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.