கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி நிரம்பி நீர் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். இதனால் பல இடங்களில் பொதுமக்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சில தினங்களாகவே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் ஓசூர் சந்திராம்பிகை ஏரி நிரம்பி ராஜ கால்வாயில் தண்ணீர் வெள்ளப்பெருக்குடன் ஓடி வருகிறது. இந்நிலையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சி.சி.நகர், என்.ஜி.ஓ காலனி உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வெள்ளத்தில் சிக்கியுள்ள குடியிருப்பு வாசிகள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களைக் கூட வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் மூலம் படகுகள் மூலமாக குடியிருப்பு வாசிகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. ஓசூர் அருகே தர்கா ஏரிக்கரையின் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பே இந்த வெள்ளப்பெருக்கு காரணம் எனவும், இது தொடர்பான ஆக்கிரமிப்புகள் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.