Skip to main content

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் ஜாமீன் கோரி மனு!

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

Five people, including Kallakurichi school principal, seek bail!

 

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் கோரி மகிளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியில் 12- ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில், பள்ளியின் தாளாளர், தாளாளரின் மனைவி மற்றும் மூன்று ஆசிரியர்கள் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், அவர்களை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 

 

இந்த மனு நேற்று (27/07/2022) நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் ஆகிய ஐந்து பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டு, அவர்களை மீண்டும் இன்று (28/07/2022) மதியம் 12.00 மணிக்கு ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார். 

 

அதைத் தொடர்ந்து, அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நேற்று மதியம் விசாரணை தொடங்கிய நிலையில், விசாரணை முடிந்து அவர்களை நேற்றிரவு மீண்டும் சிறையில் அடைத்தனர். 

 

இந்நிலையில், தனியார் பள்ளியின் தாளாளர், தாளாளரின் மனைவி மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஐந்து பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி; காவலை நீட்டித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Senthilbalaji who appeared in person; The court extended the custody

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி கடந்த முறை காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 33ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுகொள்ள சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (22.04.2024) செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 34 ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.