
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு கொல்லிமலை அய்யாறு நீராதாரமாக உள்ளது. அய்யாற்றில் நீர் வரத்து குறைந்து பாசனத்திற்கு திருப்பி விடப்பட்டதால், ஏரிக்கு வரும் நீர் தடைபட்டது. ஏரி வறண்டு போகும் நிலையில் இப்பகுதி மக்களுக்காக மீன்பிடி திருவிழா ஊராட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று காலை 8 மணிக்கு மீன்பிடி திருவிழா துவக்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாலை 5 மணிக்கே மீன்பிடி வலைகளுடன் பொதுமக்கள் திரண்டு விட்டனர். மேலும், ஊராட்சியின் அறிவிப்பிற்காக காத்திராமல், மீன்களை பிடிக்க தொடங்கி விட்டனர். இதனால் 8 மணிக்குதான் மீன்பிடி திருவிழா என்று சரியான நேரத்திற்கு வந்த துறையூர், தம்மம்பட்டி, தாத்தையங்கார்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே மீன்கள் அள்ளிச்செல்லப்பட்டதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.