Skip to main content

“மீனவர் நலவாரிய அட்டை வழங்க வேண்டும்” - மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Fishermen Workers' Union struggle in Virudhunagar

 

மீனவர் நலவாரியத்தில் விண்ணப்பித்த அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக நலவாரிய அட்டைகளை வழங்கிட வலியுறுத்தி தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, விருதுநகர் மாவட்ட செயலாளர் சி.செல்வம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பின்வரும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  

 

மீன் வளத்தையும் மீனவர்களையும் பாதுகாத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும். இந்தியாவின் 106 நதிகளையும் கடலையும் இணைக்கும் சாகர்மாலா திட்டத்தால் நதி நீரை கடல் நீராக மாற்றக்கூடாது. இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல், விவசாயம்,  குடிநீர் போன்ற தேவைகளுக்கு அன்னிய கார்ப்பரேட் கம்பெனிகளிடம் கையேந்த வைத்துவிட வேண்டாம். கடல் மீனவரைப் போல் புயல் பருவகால சேமிப்பு நிதி,  மீன்பிடி தடைக்கால நிவாரணம், மீன்பிடி குறைவு கால நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

விருதுநகர் மாவட்ட மீனவத் தொழிலாளர்களில், நலவாரிய அட்டை இருந்தும் விடுபட்டவர்களுக்கு கொரோனா நிவாரணம் உடனே வழங்க வேண்டும். மீனவத் தொழில் புரியும் அனைவரையும் மீனவக் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும்.  60 வயதான மீனவத் தொழிலாளர்களுக்கு மீன் வளத்துறை மூலம் மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி நிர்வாகத்தில் இயக்கப்படும் மீன் மார்க்கெட்களில் கழிப்பறை வசதி, குடிதண்ணீர் வசதி மற்றும் குழந்தைகள் காப்பக வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவத் தொழிலாளர்களும் மீனவர் நலவாரியத்தில் உடனே பதிவு செய்திட  மீன் வளத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசால் மீனவர் நலவாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்விநிதி உதவி, திருமண நிதி உதவி, விபத்து மற்றும் இறப்பு நிதி உதவி போன்ற பணப்பயன்களை உயர்த்தி வழங்கிட வேண்டும்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் விருதுநகர் மாவட்டம் முழுவதுமிருந்து பங்கேற்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.