Skip to main content

மீனவர் உயிரிழப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Published on 24/04/2018 | Edited on 25/04/2018


தூத்துக்குடியில் நடுகடலில் மீனவர் உயிரிழப்புக்கு காரணமான கப்பலை கண்டறிந்து கப்பல் உரிமையாளரிடம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுதர கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நாகம்மாள் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் கணவர் முருகேசன். இவரின் சொந்த மீனவ கிராமமான இரணியன்வலசையில் மீன்பிடி தொழிலில் வருமானம் குறைவாக இருந்ததால் தூத்துக்குடி மாவட்டம், தரவைக்குளம் பகுதியை சேர்ந்த மரிய நெல்சன் என்பவரிடம் 5 வருடங்களாக பணிபுரிந்தார். இந்நிலையில் என் கணவர் மற்றும் சிலர் கடந்த ஜனவரி 25 ஆம் தேதி வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஜனவரி 30 ஆம் தேதி காலை 6.15 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து தெற்கே 23 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கிழக்கு திசையில் இருந்து ஒரு கப்பல் அதிவேகமாகவும், எச்சரிக்கை ஒலி எழுப்பாமலும் என் கணவர் சென்ற விசை படகின் மீது மோதியது.

இதில் என் கணவருக்கு தலையில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்தனர். எந்த சர்வதேச கப்பலும் அல்லது வணிக கப்பலும் 24 மைல் தூரத்திற்குள் வரக்கூடாது என சர்வதேச சட்டமும், இந்திய கடலோர எல்லை சட்டமும் கூறுகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, இராமேசுவரம் போன்ற பகுதிகளில் விசைபடகு மீன்பிடி தொழில் செய்யும் இடங்களில் சர்வசாதாரணமாக சர்வதேச கப்பல்கள் உள்நுழைந்து பெரும் விபத்துகளை ஏற்படுத்துகின்றன.

எனது கணவர் உயிரிழப்புக்ககு காரணமான கப்பலை கண்டறிந்து கப்பல் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுதர உத்தரவிடுமாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது "இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தார்".

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.