Skip to main content

கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்! சுருக்குமடி வலையை அனுமதிக்கக் கோரிக்கை!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

சுருக்குமடி வலை கொண்டு மீன்பிடிக்க அனுமதிக்கக்கோரி, நூற்றுக்கணக்கான மீனவர்கள் கடற்கரையில் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கடலூர் மாவட்டத்தில், ஜூன் 01-ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதேசமயம் தமிழ்நாடு கடல் - மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் அரசு ஆணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், அதனைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும் அதனை மீறி சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக திறன் கொண்ட இயந்திரங்களை பயன்படுத்தினால், தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி, படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்ததுடன் இதனை மீறுவோருக்கு மீன்வளத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்தது. 

 

இதனிடையே கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மீனவர்கள் சிலர் சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு தரப்பு மீனவர்களிடையே  மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

 

கடலூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் சுருக்குமடி வலைகளுடன் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித்து திரும்பின. கடலூர் துறைமுக பகுதியில் விற்பனைக்காக மீன்கள் இறக்கப்பட்டபோது அங்கு வந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராமலட்சுமி, "சுருக்கு மடி வலைகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்களை விற்கவோ, வாங்கவோ கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்' என எச்சரித்தார். அதையடுத்து சுருக்குமடி மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை புதுச்சேரி பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்றனர்.

 

இதுபற்றி தகவலறிந்த மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினர், கடலூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கை நடத்தி, மீன்கள் ஏற்றி வந்த லாரிகளை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையை எதிர்த்து ஏராளமான மீன் வியாபாரிகள் மீன்வளத்துறை அலுவலத்தில் திரண்டனர். ஒவ்வொரு வாகனத்திலும் இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய மீன்கள் இருப்பதாகவும், அதை விடுவிக்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு வரவில்லை. 

 

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

இதனால் 'சுருக்கு மடி வலைகளை அனுமதிக்கும் வரை கடலூர் மாவட்டத்தில் அனைத்து வகையான படகுகளிலிருந்து மீன்கள் வாங்குவதை நிறுத்த போகிறோம், அனைத்து ஐஸ் கம்பெனிகளும் மூடப்படும்' என்று அறிவித்தனர்.

 

‘சுருக்கு மடி வலைக்கான தடையை நீக்கக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்கக்கோரியும்’ அனைத்து சுருக்குமடிவலை மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

இதனிடையே டன் கணக்கில் மீன்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை கண்டித்து மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலூர் துறைமுகம் மற்றும் கடற்கரையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

 

அதேவேளையில் பறிமுதல் செய்யப்பட்ட பெரிய வாகனங்களுக்கு ரூபாய் 50 ஆயிரமும், சிறிய வாகனங்களுக்கு ரூபாய் 30 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு 20 வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. 

 

இதையடுத்து சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி கடலில் இறங்கி போராடப்போவதாக கூறி மீனவர்கள் இன்று கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் குடும்பத்தினருடன் கூடினர்.

 

Fishermen conducting series of protests in cuddalore demanding permission for the banned fishing net - surukkumadi

 

அதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் போராட்டக்காரர்களிடம் கடலில் இறங்க அனுமதியில்லை எனக் கூறியதால் கடற்கரையில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் சார் ஆட்சியர் ஜெகதீஸ்வரன், மீன்வளத்துறை, காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம், ‘அரசுக்கு தகவல் தெரிவித்து கோரிக்கையைப் பரிசீலிப்பதாக’ சமரசம் செய்ததையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் குவிந்ததால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.