Skip to main content

14 மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Fishermen of 14 districts are prohibited from fishing

 

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், 24 மணிநேரத்தில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 16 ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனையொட்டி டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 டெல்டா மாவட்டங்களில் இன்று மிகக் கன மழை பெய்யும் என வானிலை மையம் ஆரஞ்சு நிற அலார்ட் கொடுத்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (14.11.2023) விழுப்புரம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் போன்ற மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இன்றும் (13.11.2023), நாளையும் (14.11.2023) கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரத்தில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீன்வளத்துறை ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்