Skip to main content

5 நாள் போராட்டத்திற்கு பின் மீனவர் உடல் ஒப்படைப்பு!

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Fisherman's handed over after 5 days of struggle!

 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடந்த 17ஆம் தேதி 118 படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இந்நிலையில், 18ஆம் தேதி அதிகாலை ராஜ்கிரண், சுகந்தன், ஜோசப் ஆகியோர் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இவர்களின் படகு நோக்கி வேகமாக வந்த இலங்கை கடற்படை கப்பல், மீனவர்களின் படகில் மோதி மூழ்கடித்தது. படகிலிருந்த மீனவர்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சுகந்தன், ஜோசப் ஆகிய இரு மீனவர்களை மீட்டு கைது செய்த கடற்படையினர், காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்றனர்.

 

ஆனால் இந்த சம்பவத்தில் ராஜ்கிரண் நிலை என்னவானது என்றே தெரியாமல் போனது. அன்று மாலை ராஜ்கிரண் உடல் கண்டெடுக்கப்பட்டதாக முதலில் அறிவித்த இலங்கை அரசு, சிலமணி நேரத்தில் அந்த தகவலைத் திரும்பப் பெற்றதால் மீனவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் (21.10.2021) ராஜ்கிரணின் உடல் மீட்கப்பட்டதாகப் படங்கள் வெளியானது. இலங்கை கடற்படை கப்பலால் மோதி கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலையும் கைது செய்யப்பட்ட இரு மீனவர்களையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். 5வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.

 

இந்நிலையில், மீனவர் ராஜ்கிரணின் உடல் இன்று ஒப்படைக்கப்பட்டது. இந்தியக் கடலோர கடற்படையிடமிருந்து உடலைப் பெற கோட்டைப்பட்டினத்திலிருந்து இரண்டு விசைப்படகுகளில் 9 மீனவர்களும், இரண்டு அதிகாரிகளும் சர்வதேச எல்லைக்குச் சென்ற நிலையில், இந்தியக் கடற்படை அதிகாரிகளிடம் மீனவர் ராஜ்கிரணின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.