Skip to main content

மறு பிரேதப் பரிசோதனைக்காக மீனவர் ராஜ்கிரண் உடல் தோண்டி எடுப்பு! 

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Fisherman Rajkiran's body exhumed for autopsy

 

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகிய மூன்று மீனவர்கள் கடந்த மாதம் இறுதியில் மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களிடமிருந்து மிரட்டி மீன்களை வாங்கிக்கொண்டு, அவர்களை அங்கிருந்து விரட்டினர். அதன்பிறகு அவர்கள் எதிர்பாராதபோது, கடற்படை ரோந்த கப்பலை அம்மீன்வர்களின் படகின்மீது போதினர். இதில் படகு உடைந்து கடலுக்குள் மூழ்கியது. 

 

அதிலிருந்த சுகந்தன், சேவியர் ஆகிய இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் விசைப்படகு ஓட்டுநர் ராஜ்கிரண் பலமணி நேரம் வரை மீட்கப்படவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. சில புகைப்படங்களையும் வெளியிட்டது. 

 

இந்நிலையில், இறந்த மீனவர் ராஜ்கிரண் உடலை ஒப்படைக்கக் கோரி ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் இறந்த மீனவரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

அமைச்சர் மெய்யநாதன் மீனவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் சொன்னதோடு, தற்காலிக நிவாரணம் வழங்கினார். இந்த நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு இந்திய சர்வதேச எல்லையில் இலங்கை அரசால் மீனவர் ராஜ்கிரன் உடல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மீனவரின் உடலை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உறவினர்களிடம் இந்திய கடற்படையினர் ஒப்படைத்தனர். மீனவர் உடல் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திற்கு கொண்டுவரப்பட்டு மீனவரின் உடலுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், மீனவரின் குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டது. பின்னர் மீனவர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்குப் பிறகு கோட்டைப்பட்டினம் மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

Fisherman Rajkiran's body exhumed for autopsy

 

அப்போது, மீனவர் ராஜ்கிரண் இறப்பில் சந்தேகம் உள்ளது. இலங்கை அரசு மீனவர் ராஜ்கிரணை பிடித்து சித்தரவதை செய்து சுட்டுக் கொன்றிருப்பதாக சந்தேகிக்கிறோம். அதனால் இந்திய அரசு இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப் பதிவுசெய்து ராஜ்கிரண் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்திய அரசு செய்யத் தவறினால் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று நக்கீரனுக்கு சிறப்பு பேட்டி மூலம் கோரிக்கை வைத்தனர்.

 

இந்நிலையில், கடந்த வாரம் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனது கணவரை இலங்கை கடற்படையினர் பிடித்து, சித்திரவதை செய்து, துப்பாக்கியால் சுட்டுக்கொன்றிருப்பதாக சந்தேகம் இருக்கிறது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஆங்காங்கே காயங்கள் இருப்பதும், தொடையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது போல துளையும் உள்ளது. அதனால் தனது கணவரின் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் தன் கணவர் உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்ய வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த வழக்கை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை, நவம்பர் 18ஆம் தேதி (இன்று) மணமேல்குடி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கோட்டைபட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்ட மீனவர் ராஜ்கிரண் உடலை மீண்டும் தோண்டி எடுத்து மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

 

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுபடி இன்று (18.11.2021) ராஜ்கிரண் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அந்த உடல் அடையாளம் காணப்பட்ட பிறகு மறு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அரசு மருத்துவர்கள், தடயவியல் துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் இடம்பெற்றிருந்தனர். மறு பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மீனவர் ராஜ்கிரண் எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.