தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களிடம் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 பணிகள் குறித்து பட்டியல் தயாரிக்குமாறு அறிவுறுத்தினார். இந்நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் தமிழ்நாட்டிலேயே முதல் சட்டமன்ற உறுப்பினராக திருச்சி கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகள் குறித்த பட்டியலை தயாரித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கொடுத்துள்ளார்.
அந்தப் பட்டியலில், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை வயதானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிரமமின்றி தரிசிக்க ரோப்கார், தங்கு தடையற்ற குடிநீர், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் முக்கியக் கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைத்துள்ளார். இந்த நிகழ்வின் போது எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜுடன் மாமன்ற 3வது மண்டல குழுத் தலைவர் மதிவாணன் உடன் உள்ளார்.