First Anniversary Tribute to pa. pzhani

சிதம்பரம் நகரத்தில் பா. பழநிபாபு அணிவணிகத்தின் (நகைக்கடை) உரிமையாளர் பா. பழநி. தொழில் முனைவரான இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிய கொள்கையால் ஈர்க்கப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்திலும் செயல்பட்டு வந்தார்.

Advertisment

இவர் பிரதானமாக, பெற்றோர்களை இழந்த மாணவ மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத்தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் கல்விச் செலவுகளை ஏற்று அவர்களுக்கு உதவி செய்து வந்தார். மேலும் அரசுப் பள்ளிகளுக்குத்தேவையான உபகரணங்கள், பள்ளியின் கழிவறை வசதிகள் சரியில்லாத பல பள்ளிகளின் கழிவறைகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். அதேபோல் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி அனைவரின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.

Advertisment

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரத்தின் பல்வேறு இடங்களில் இவர், பூமி வெப்பமாகி வருகிறது என மரக்கன்றுகளை நடுவதற்கு உறுதுணையாக இருந்து மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். மேலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இசை, இலக்கியம் வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கவனத்தை செலுத்தி மற்றவர்களுக்கு இதுகுறித்து எடுத்து கூறி அவர்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் கடந்த ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இவரது முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி செவ்வாயன்றுசிதம்பரம் கீழவீதியில் இயற்கை பாதுகாப்பு நிறுமம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இயற்கை பாதுகாப்பு நிறுமம் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

Advertisment

தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் சம்பந்தம், எழுத்தாளர் சீனி மோகன், சமூக ஆர்வலர் நெய்வேலி பாலு,தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில துணைத் தலைவர் மூசா, இயற்கை பாதுகாப்பு நிறுமம் புருஷோத்தமன், செம்மை வாழ்வியல் நடுவம் சிவப்பிரகாசம், சிதம்பரம் நகைக்கடை உரிமையாளர் சங்கத் தலைவர் ராமநாதன், ஆறுமுக நாவலர் பள்ளியின் செயலாளர் மருத்துவர் அருள்மொழி செல்வன், மார்க்சிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, நீர்நிலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் செங்குட்டுவன் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு அவரது படத்திற்கு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பா. பழநி வாழ்வும் பணியும் என்ற நூல் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இந்த நூல் மற்றும் பசுமை பூமி சுற்றுச்சூழல் அமைப்பு சார்பாக விதைப் பந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.