Skip to main content

பட்டாசு விபத்து: துண்டு துண்டாக மீட்கப்பட்ட சிறுவனின் உடல்!

Published on 29/10/2021 | Edited on 29/10/2021

 

Fireworks accident: Boy's body recovered in pieces

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பரபரப்பான மக்கள் நடமாட்டம் உள்ள மூன்றுமுனை சந்திப்பு பகுதியில் உள்ள பட்டாசு கடையில் நேற்று முன்தினம் (27.10.2021) திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அக்கம்பக்க கடைகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்ததில் பெருத்த சேதம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் பீரங்கி குண்டு தாக்கியதுபோல் உருக்குலைந்து போனது. அதில் அப்பகுதியில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் வாங்கவந்த பொதுமக்கள், டீ குடிக்க வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

 

இதில் தீக்காயம்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிவிபத்தில் சிதறிய கட்டட சுவரின் பாகங்கள் பலர் மீது மோதி முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர். இதில் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதியின் சகோதரர் மகன் தனபால் என்ற 11 வயது சிறுவன் உடல் மட்டும் கிடைக்கவில்லை. நேற்று இடிபாடுகளை இயந்திரம் கொண்டு அப்புறப்படுத்தினார்கள். அப்போது இடிபாடுகளுக்கிடையே சிறுவனின் உடல் துண்டுத் துண்டாக மீட்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு சிறுவனின் உறவினர்கள் கதறி அழுதனர்.

 

இந்த விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதியின் தம்பி முருகன், தனபாலை தனது தாயார் வள்ளியிடம் விட்டுவிட்டு அவர் மனைவி சித்ரா உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

 

Fireworks accident: Boy's body recovered in pieces

 

ஆனால் அவர்கள் சிகிச்சை முடிந்து திரும்ப வருவதற்குள் பட்டாசு கடையில் நடந்த பெரும் தீ விபத்தில் வள்ளியும் அவரது பெயரன் தனபால் ஆகிய இருவரும் விபத்தில் இறந்தனர். பெயரனும், பாட்டியும் பலியான சம்பவம் மக்களிடம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து நடந்த இடத்தை தடய அறிவியல் இணை இயக்குநர் சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதியில் கிடைத்த தடயங்களையும் சேகரித்துள்ளார்.

 

பின்னர், இந்த விபத்து குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “பொதுவாக அனுமதி பெற்று விற்பனை செய்யக்கூடிய பட்டாசுகளும் உள்ளன. அனுமதியின்றி மறைமுகமாக பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடிய முறைகளும் உள்ளன. எனவே கிடைத்த தடய மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள தடய அறிவியல் இயக்குநரத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை கிடைத்த பிறகே இதனுடைய உண்மை நிலவரம் என்ன என்பது தெரியவரும்” என்கிறார் தடய அறிவியல் இணை இயக்குநர் சண்முகம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.